ஜனநாயகத்தை மரணிக்க செய்கிறார் ஆளுநர்... கேரளாவில் முழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவனந்தபுரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தாமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனநாயகத்தை மரணிக்க செய்பவராக இருக்கிறார் என கேரளாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அவசியம் திருத்தம் செய்திட வேண்டும்.

தேசிய அளவில் வெற்றியடைவதன் மூலமாக மட்டுமே இந்தியாவின் ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும் இறையான்மையையும் பாதுகாக்க முடியும். மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். பினராயி விஜயனும் நானும் தலையாட்டி பொம்மைகளாக இருந்து இருந்தால் நம் ஆட்சிக்கு எந்த நெருக்கடியையும் தந்திருக்க மாட்டார்கள்.
ஜனநாயகத்தை மரணிக்க செய்பவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இரு முறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதித்து தொடர்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி." என்றார்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது ஆண்டு மாநில மாநில மாநாடு நாளை நிறைவடைகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கண்ணூருக்கு சென்றடைந்தார். அவரை விமான நிலையம் சென்று கேரள மாநில அமைச்சர்கள் வரவேற்பு கொடுத்தனர். இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications