ஜகா வாங்கிய ஆளுநரின் முக்கிய 'கைகள்'.. அதிர்ச்சியில் ஆரிஃப் முகமதுகான்.. இது கேரள கதகளி ஆட்டம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநர் மீது குற்றச்சாட்டு அதிகரித்து வரும் நிலையில், நேற்று(நவ.08) ஆளுநரின் சட்ட ஆலோசகரும், கேரளாவில் உள்ள ஒட்டு மொத்த பல்கலைக்கழகங்களின் வேந்தரின் நிலையான ஆலோசகரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
11 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருந்த விவகாரத்தில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் விசாரணை முடியும் வரை எடுக்கக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த அறிவுறுத்தல் வந்த சில மணி நேரங்களில் அடுத்தடுத்து ராஜினாமா கடிதங்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பெற்றுக்கொண்ட நிலையில், இதுவரை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் ஆளுநருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மோதல்
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை அம்மாநில அரசே நிர்ணயிக்கிறது. அதேபோல ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசும் இதே நடைமுறையை மேற்கொள்ள முற்சிக்கையில் ஆளுநர் இதற்கு உடன்படாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனையடுத்து மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

நோட்டீஸ்
இந்நிலையில், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் யுஜிசி விதிகளுக்கு எதிரானது என சமீபத்தில் அந்நியமனத்தை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு மீதமுள்ள 11 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் விளக்கம் கேட்டு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸை எதிர்த்து துணை வேந்தர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தேவன் சந்திரன், விசாரணை முடியும் வரை துணை வேந்தர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நேற்று ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அறிவுறுத்தல்
இந்த அறிவுறுத்தல் வந்த சில மணி நேரங்களில் ஆளுநரின் சட்ட ஆலோசகரான ஜாஜு பாபு மற்றும் கேரளாவில் உள்ள ஒட்டு மொத்த பல்கலைக்கழகங்களின் வேந்தரின் நிலையான ஆலோசகரான விஜயலட்சுமி ஆகியோர் ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சம்பவம் ஏற்கெனவே பரபரப்பாக இருந்த அம்மாநில அரசியல் சூழலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. ஏனெனில், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு எதிராக ஆளுநர் ஆரிஃப் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ஆளுநரின் பிரதிநிதியாக இவர்கள் இருவரும் இருந்து வந்தனர்.

பின்னடைவு
தற்போது இவர்களும் ராஜினாமா செய்திருப்பது ஆளுநருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல ஆளுநரிடம் வழங்கப்பட்ட ராஜினாமா கடிதத்தில் ராஜினாமாவுக்கான காரணமாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்கிற தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இது இவ்வாறு இருக்கையில் முன்னதாக கேரளாவின் கைராளி மற்றும் மீடியா ஒன் செய்தி சேனல்களை, செய்தியாளர் சந்திப்பு கூட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியிருந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. துணை வேந்தர்கள் தொடங்கி செய்தியாளர்கள் வரை ஆளுநர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications