நாகரீக உலகில் கொடூர நரபலி..வெலவெலத்த கேரளா..அரக்கர்களை எச்சரித்த பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: பணக்காரனாகவேண்டும் என்ற பேராசையில் இரண்டு பெண்களை கொடூரமான முறையில் நரபலி கொடுத்து கொலை செய்துள்ளனர். திகிலூட்டும் வகையில் நடந்த நரபலி சம்பவம் கேரளாவில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அரக்க மனம் படைத்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணத்தாசை ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு கேரளாவில் நடந்த சம்பவமே சாட்சியாக இருக்கிறது. அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். சிலரோ உழைப்பை நம்பி வாழ்கின்றனர்.
வயிற்று பிழைப்புக்காக கூலி தொழில் செய்து வந்த இரண்டு பெண்களை பணத்தாசை காட்டி அழைத்து வந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் இரண்டு கொடியவர்கள். தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு பிழைப்பு தேடி போன பத்மாவும், கணவனை பிரிந்து வாழ்ந்த ரோஸ்லினும்தான் அநியாயமாக உயிரை இழந்துள்ளனர்.

துண்டு துண்டாக வெட்டி
நரபலி கொடுத்த பெண்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி அருகிலுள்ள பண்ணை வீட்டில் தீவைத்து எரித்துள்ளனர். இதுதொடர்பான தடயங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். ஹைக்கூ கவிதை எழுதுவதிலும் பகவால் சிங் வல்லவராம். ஹைக்கூ கவிதை எழுதுவதற்காக தனி வகுப்புகளையும் பகவால் சிங் நடத்தி வந்துள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நரபலியும் பின்னணியும்
திகில் கிளப்பும் நரபலி குறித்தும் ரத்த பூஜை நடந்தது பற்றியும் செய்தியாளர்களிடம் கொச்சி நகர கமிஷனர் நாகராஜூ விவரித்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் வரும் நோயாளிகளின் நோய்களை குணமாக்கி வந்தார். இவரது மனைவி லைலா. ஹீலிங் எனப்படும் இந்தத் தொழிலை இவர்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகின்றனர்.

விசாரணை + கைது
இந்நிலையில் பகவால் சிங்குக்கு பணம் செழிப்பதற்காகவும், வளத்தைப் பெருக்குவதற்காகவும் 2 பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பெரும்பாவூர் ஷபி (எ) ரஷீத் கைது செய்யப்பட்டுள்ளனர். பகவால் சிங், லைலா இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

கொடூர கொலை
எர்ணாகுளத்திலிருந்து அந்த 2 பெண்களையும் பணம் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்து வந்து கொலை செய்துள்ளனர். 2 பெண்களையும் மிகவும் கொடூரமான முறையில் கொன்றுள்ளனர். இது நரபலியாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

ரத்த பூஜை
பெண்களின் மார்பகங்களை அறுத்தும் பிறப்புறுப்பில் குத்தியும் ரத்தத்தை எடுத்து பூஜை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஷபியிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளோம். அதைப் போலவே பகவால் சிங், லைலா ஆகியோரிடமும் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளோம். பகவால் சிங்குக்கு அதிக பணத்தேவை இருந்ததால் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது என்றும் கமிஷனர் நாகராஜூ தெரிவித்தார்.

பினராயி விஜயன் எச்சரிக்கை
ஆதரவற்றவர்களையும் அப்பாவிகளையும் குறிவைத்து நரபலி கும்பல் ஒன்று சுற்றி வருகிறது. அத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளார் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன். முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நாகரீக உலகில் இப்போதும் அரக்க மனதுடன் சிலர் உள்ளனர் என்பதையே இந்த செயல் காட்டுகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications