கேரளாவின் மாபெரும் சாதனை..ஒரே நாளில் 4.50 லட்சம் பேருக்கு வேக்சின்.. தீவிர நடவடிக்கையில் வீணா ஜார்ஜ்
திருவனந்தபுரம்: கொரோனா தடுப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் கேரள அரசு, நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 4.50 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. 2ஆம் அலை உச்சத்தில் இருந்து போது 4 லட்சம் வரை சென்ற வைரஸ் பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது,
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
எனவே, கொரோனா அடுத்த அலை ஏற்படுவதற்கு முன் வேக்சின் பணிகளை விரைவாக மேற்கொள்ள பல்வேறு மாநிலங்களும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கேரளா
இந்தியாவிலேயே கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என இரண்டிலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று கேரளா, அங்கு தற்போது வைரஸ் பாதிப்பும், பாசிட்டிவ் விகிதமும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வேக்சின் பணிகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் சுமார் 4.50 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.
வேக்சின் பணிகள்
கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேக்சின் பணிகள் குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் 1380 அரசு தடுப்பூசி மையங்கள் உள்பட மொத்தம் 1,522 மையங்களின் மூலம் வேக்சின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 16 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.
4.53 லட்சம் பேருக்கு தடுப்பூசி
குறிப்பாக, நேற்று சனிக்கிழமை மட்டும் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4.53 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேநேரம் இப்போது எங்களிடம் இரண்டு லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. மத்திய அரசு உடனடியாக கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும். இல்லையென்றால் வேக்சின் பணிகளை நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
தேசிய சராசரியைவிட அதிகம்
18 முதல் 45 வயதுடையவர்களுக்குத் தேசிய சராசரியைவிட அதிகமாக நாங்கள் வேக்சின் போட்டுள்ளோம். கேரளாவில் 18 முதல் 45 வயதுடையவர்களில் 53.43% குறைந்ததது ஒரு டோஸ் வேக்சின் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல 23.19% பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
வைரஸ் பாதிப்பு
முன்னதாக கடந்த வாரம் கேரள அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது. அதன் பின்னர் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் புதிதாக 18,531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல 89 பேர் கொரோனாவால் பலியாகியிருந்தனர். இதனால் வார ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கேரள அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.