மத்திய அரசை தொடர்ந்து.. பிஎஃப்ஐக்கு கேரள அரசும் தடை.. வெளியானது அரசாணை
திருவனந்தபுரம்: பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது மத்திய அரசு தடை விதித்து உள்ள நிலையில் இதை கேரளாவிலும் அமல்படுத்துமாறு அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள்.
இதனை கண்டித்து அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போலீஸ் சோதனை
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.

பி.எஃப்.ஐ. தடை
இந்த சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.

துணை அமைப்புகள்
இத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கேரள பி.எஃப்.ஐ. அறிவிப்பு
மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்ததை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகள் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் இந்த அமைப்பை கலைப்பதாக அறிவித்தார்.

கேரள அரசு அரசாணை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதித்த தடையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனை அடுத்து கேரளாவிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மேலும் கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் அப்துல் சத்தாரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications