சபரிமலைக்கு விமான நிலையம்- எருமேலி அருகே எஸ்டேட்டை கையகப்படுத்த கேரளா அரசு ஆர்டர்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான விமான நிலையம் அமைக்க எருமேலி அருகே எஸ்டேட் ஒன்றை கையகப்படுத்தும் ஆணையை கேரளா மாநில அரசு பிறப்பித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பொதுவாக பம்பையை சென்றடைந்து அங்கு புனித நதியில் நீராடிவிட்டு மலையில் ஏறுவது சபரிமலை யாத்திரை. பம்பை வழி மலைப்பாதை அல்லாமல் பெருவழிப் பாதையாகவும் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வருவதும் வழக்கம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தந்துள்ளது. தடை இல்லாமல் மின்சாரம், குடிநீர் வசதிகள் செய்யபப்ட்டுள்ளன. போதுமான மருத்துவ வசதிகளும் பக்தர்களுக்கு வழக்கம் போல செய்யப்பட்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக சபரிமலைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
சபரிமலைக்கு நேரடியாக விமான சேவையை இயக்கவில்லை. அதற்குப் பதில், எருமேலி அருகே வனப்பகுதியில் விமான தளம் அமைக்கப்பட இருக்கிறது. விமான நிலையம் அமைப்பதற்காக செருவெலி எஸ்டேட் கையகப்படுத்தப்பட இருக்கிறது. மொத்தம் 2570 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஓடுபாதை மட்டும் 3,500 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு நாடாளுமன்ற குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறது.
சபரிமலை மண்டல பூஜை..தங்க அங்கியில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்..குவியும் வருமானம்
செருவெலி எஸ்டேட் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான அரசாணையை கேரளா அரசு நேற்று பிறப்பித்திருக்கிறது. எருமேலி தெற்கு மற்றும் கோட்டயம் கிராமங்களில் இந்த நிலம் கையகப்படுத்தப்படுகிறது. செருவெலி எஸ்டேட் தவிர அதன் வெளியே 370 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இப்பகுதிகளில் கடந்த செப்டம்பர் மாதம் மண் பரிசோதனைகள் நடத்தப்பட்டு பாசிட்டிவ் முடிவுகள் கிடைக்கப்பெற்றன. சபரிமலைக்கான விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையடைய 3 ஆண்டுகள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சபரிமலைக்கான விமான நிலையம் அமைக்கப்பட்டால் பத்தனம்திட்டா, கோட்டயம், ஆழப்புழா, இடுக்கி மாவட்ட கிராமங்கள் பெருமளவு பயனடையும். கோட்டயம் நகரை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமங்கள் அமைந்துள்ளன. தமிழக எல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் எளிதாக சபரிமலை விமான நிலையத்துக்கு வந்து செல்லவும் முடியும். இதனால் கேரளா, தமிழகம் ஆகிய இரு மாநில மக்களும் பயனடைவர் எனவும் கூறப்படுகிறது.