வெற்றினும் சொல்லிட முடியாது... தோல்வினும் சொல்லிட முடியாது... திரிசங்கு நிலையில் காங்கிரஸ்..!
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ள இடங்களை வைத்து அது பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது என்றும் சொல்ல முடியாது தோல்வியை தழுவிவிட்டது எனவும் கூற முடியாது.
கிராம பஞ்சாயத்துக்களை பெரியளவில் கோட்டைவிட்ட காங்கிரஸ் கூட்டணி நகராட்சிகளை ஓரளவு கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது.
இதேபோல் 6 மாநகராட்சிகளில் 3 மாநகராட்சிகளை வென்று ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

கேரளா ஸ்பெஷல்
கேரள மாநிலத்தை பொறுத்தவரை தேசியளவில் ஸ்பெஷல் கவனத்தை ஈர்த்துள்ள மாநிலம் என்றே சொல்லலாம். காரணம் அங்கிருந்து தான் ராகுல்காந்தி நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதைத்தவிர அங்கு களப்போட்டி எப்போதும் எல்.டி.எஃப்.- யு.டி.எஃப். என்கிற ரீதியில் தான் இருக்கும் . ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜக அந்த இரு கூட்டணிகளுக்கும் கடும் போட்டியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

காங்கிரஸ் கூட்டணி
கேரளாவில் உள்ள 86 நகராட்சிகளில் 45-க்கும் மேற்பட்ட நகராட்சிகளை காங்கிரஸ்-முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளடங்கிய யுடிஎஃப் கூட்டணி கைப்பற்றியுள்ளது. இது ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு லேசான சறுக்கலாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதேவேளையில் கிராமப்பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல், என எடுத்துக்கொண்டால் அங்கு காங்கிரஸ் கூட்டணி சிறிய பின்னடைவை தான் சந்தித்திருக்கிறது.

சரிசமம்
திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கைப்பற்றவுள்ளது. அதற்கு சற்றும் சளைக்காத வகையில் கொச்சி, திருச்சூர், கன்னூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் காங்கிரஸ்-முஸ்லீம் லீக் கூட்டணி கைப்பற்றுகிறது. இதனால் மாநகராட்சிகளை பொறுத்தவரை இரண்டு கூட்டணிகளுக்கும் சமபலம் இருப்பதாகவே கருதலாம்.

கழுத்துப்பிடி போட்டி
இன்று வெளியாகியுள்ள கேரள உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் எதை உணர்த்துகிறது என்றால், அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மிக மிக கடுமையான போட்டி உருவாகக் கூடும் என்பதை உணர்த்துகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் கரணம் தப்பினால் மரணம் என்கிற அளவுக்கு கம்யூனிஸ்ட்களுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கழுத்துப்பிடி போட்டி இருக்கும் என்பது இப்போதே தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தலில் பெற வேண்டிய வெற்றியை இலக்காக கொண்டு அடுத்த ஓட்டத்தை எல்.டி.எஃப்.-யு.டி.எஃப் தலைவர்கள் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications