இடதுசாரிகளிடமிருந்து பந்தளம் நகராட்சியை கைப்பற்றிய பாஜக.. சபரிமலை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி?
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு உள்ளே பெண்களை அனுமதிக்க கூடாது என்று தீவிரமாக பாஜக போராட்டம் நடத்தியதற்கு தேர்தலில் பலன் கிடைத்துள்ளது. பந்தளம் நகராட்சி தேர்தலில் பாஜக வென்றுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து கேரள பாஜக சார்பில் தீவிரமாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்த பெண்கள் ஆங்காங்கு விரட்டியடிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களின் மூலம் கேரளாவில் உள்ள இந்துக்களை ஒருங்கிணைத்து தேர்தலின் போது அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று பாஜக நினைப்பதாக இடதுசாரிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இருப்பினும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, கேரளாவில் பாஜக வெல்ல முடியவில்லை. ஆனால் கேரள உள்ளாட்சித் தேர்தலின்போது பந்தளம் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 17 வார்டுகளை பாஜக வென்றுள்ளது. இதன் மூலம், இடதுசாரி கூட்டணியிடமிருந்து நகராட்சியை கைப்பற்றியுள்ளது.
பந்தளராஜா குடும்பத்தினர் வசிக்கக்கூடிய நகரம் பந்தளம். சபரிமலை ஐயப்பன் கோவிலின் ராஜ குடும்பத்திற்கும், பந்தள ராஜா குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
சுவாமி ஐயப்பன் பந்தள மன்னர்களின் ராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு அந்த ராஜ வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதால் சபரி மலைக்கு சென்று இருந்து கொண்டார். எனினும் அவர் தந்தையின் ஆசைக்காக வருடத்தில் ஒரு நாள் மட்டும் இளவரசன் கோலம் சூடிக்கொள்வதாக தன் தந்தையிடம் தெரிவித்தார். அந்த சம்பிரதாயம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முடிவை பந்தள ராஜா குடும்பமும் ஏற்க மறுத்து வருகிறது. இதை எல்லாம் வைத்து பார்த்தால் ஐயப்பன் கோவில் தொடர்பாக நடந்த போராட்டத்திற்கு பந்தளத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications