கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர்.. தந்தைக்கு ஈம சடங்கு செய்ய முடியாத கொடூரம்.. கேரளாவில் சோகம்
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கேரளா நபர் அவரது தந்தையின் ஈமச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத சோகம் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை தனக்கு ரத்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானால் தான் மிகவும் வருந்துவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குளிர் பிரதேசங்களைத் தவிர ஏனைய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டு வரும் நபர்கள் அந்தந்த மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மனதை உருக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவுது கோவிலுக்கு வராதீங்க - திருப்பதி, சபரிமலை ஆலய நிர்வாகங்கள் அறிவிப்பு
கொரோனா
கேரளா மாநிலம் தொடப்புழா பகுதியில் ஆலகோடு கிராமத்தைச் சேர்ந்த நபர் கத்தாரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அண்மையில் கேரளாவுக்கு திரும்பினார். அப்போது கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அந்த நபர் ஒரு உருக்கமான பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தந்தைக்கு உடல் நிலை பாதிப்பு
அதில் அவர் கூறுகையில் கடந்த 7-ஆம் தேதி எனது சகோதரர் அவசரமாக தொடர்பு கொள்ளுமாறு கத்தாரில் இருந்த எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. இதையடுத்து அவரை நான் தொடர்பு கொண்டேன். அப்போதுதான் தூங்கும் போது எனது தந்தை தூக்கத்தில் மெத்தையிலிருந்து கீழே விழுந்தது தெரியவந்தது. அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளா வருகை
அவருக்கு உள்புறத்தில் ரத்தக் கசிவு இருந்து வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அலுவலகத்தில் தகவல் தெரிவித்துவிட்டு விமானம் மூலம் கேரளாவுக்கு வந்தேன். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு செய்திகளை அறிந்தபோது வீட்டுக்கு செல்வது குறித்து கவலை அடைந்தேன். இதையடுத்து எனக்கு கொச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது எனக்கு எந்தவித அறிகுறிகளும் ஏற்படாததால் சொந்த ஊர் செல்ல என்னை அனுமதித்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட வார்டு
கோட்டயம் சென்றேன். அங்கு தந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற போது உறவினர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இதையடுத்து எனக்கு திடீரென இருமலும் தொண்டையில் எரிச்சலும் இருந்தது. ஆரம்பத்தில் நான் பொருட்படுத்தவில்லை. எனினும் எனது உறவினர்களின் பாதுகாப்பிற்காக கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தனிமை வார்டில் மருத்துவர்களை சந்தித்தேன். நான் கத்தாரில் இருந்து வந்ததையும் கூறினேன். இதையடுத்து என்னை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தனர்.
அழுவது
கடந்த 9-ஆம் தேதி எனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. அதில் எனது தந்தைக்கு பக்கவாதம் வந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என எனது குடும்பத்தினர் தெரிவித்தனர். நானும் எனது தந்தையும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் என்னால் என் தந்தையை ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை, அழுவதை தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.
வேதனை
எனது தந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு சென்ற போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டின் ஜன்னல் வழியாக என் தந்தையை பார்த்தேன். எனது தந்தையின் உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட போது வீடியோ கால் மூலம் அவரது முகத்தை ஒரு முறை பார்த்தேன். எனது தந்தையின் ஈமச்சடங்கில் கூட என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை ரத்த பரிசோதனையில் எனக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்தால் நான் நிச்சயம் வருத்தப்படுவேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை படித்த நெட்டிசன்கள் வேதனை அடைந்தனர்.