கேரளாவில் இன்று விடுமுறை.. 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! உம்மன் சாண்டி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி (வயது 79) உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரளா கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்தாலும், அதற்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்தான் உம்மன் சாண்டி. காங்கிரஸ்காரர்கள் என்றாலே பண்ணையார்கள் என்கிற பிம்பம் ஒரு காலத்தில் இருந்தது. அதை உடைத்ததில் உம்மன் சாண்டிக்கு மிகப்பெரிய பங்குண்டு. 7 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த இவர், எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்திருந்தார். இரண்டு முறை சாதாரண வகுப்பு பெட்டியில் தனியாக ரயில் பயணம் செய்திருக்கிறார். இந்த எளிமை மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்தது.

இந்த அரசியல் பயணங்களுக்கான தொடக்கம் அவருடைய கல்லூரி பருவம்தான். கோட்டை மாவட்டத்தில் குமரகத் காரட் வெள்ளக்காலில் கே.ஓ.சாண்டி மற்றும் பேபி சாண்டியின் மகனாய் 1943ம் ஆண்டு பிறந்த உம்மன் சாண்டி, தனது 24வது வயதில் கே.எஸ்.யு மாணவர் அமைப்பின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் எம்ல்ஏவாகவும், தொழில்துறை அமைச்சர் (1977-1978), உள்நாட்டுத் துறை அமைச்சர் (1982), நிதித்துறை அமைச்சர் (1991-1994), எதிர்க்கட்சித் தலைவராகவும் (2006-2011) பணியாற்றியுள்ளார்.
அதேபோல 2004-2006 மற்றும் 2006-2011 என இரண்டு முறை முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் புற்றுநோயுடன் போராடி வந்திருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு கேரள காங்கிரசுக்கு பேரிழப்பாகும். அரசியல் தலைவர்கள் பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இன்று ஒரு நாள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், "ஒரே ஆண்டில் நாங்கள் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோம். இருவரும் மாணவர் அரசியல் களத்திலிருந்துதான் பொது அரசியலுக்கு வந்தோம். ஒரே நேரத்தில் பொது வாழ்க்கையை முன்னெடுத்தோம்.
உம்மன் சாண்டி சிறந்த நிர்வாகியாகவும், மக்கள் மத்தியில் நெருக்கமானவராகவும் இருந்தார். அவரிடமிருந்து விடைபெறுவது கடினமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். அதேபோல தமிழ்நாடு, ஆந்திரா காங்கிரஸ் கமிட்டிகள் உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன. கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "அன்பின் சக்தியால் உலகை வென்ற மன்னனின் கதை, அதன் கடுமையான முடிவை காண்கிறது" என்று கூறியுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கூறுகையில், "உம்மன் சாண்டியின் அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமை கேரளாவின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மட்டுமல்லாது மாநில அரசியலில் புதிய முத்திரையை பதித்தது. அவருடைய சேவைக்காக என்றும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி கூறுகையில், "உம்மன் சாண்டி ஒரு முன்மாதிரியான காங்கிரஸ் தலைவர். அவர் ஆற்றிய பணிக்காக மக்களால் என்றும் நினைவுகூரப்படுவார்" என்று ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications