பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடி நிதி, ரூ.2,000 மாத உதவித்தொகை - பினராயி விஜயன்
திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் வீரியம் சற்று குறைந்துள்ளது. ஆனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று காரணமாக தாய், தந்தை இறந்து விடுவதால் அவர்களின் குழந்தைகள் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இந்த குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனவே ஹரியானா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் பெற்றோரை இழந்து அனாதையாக நிற்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி, மாத ஊக்கதொகை வழங்குவது குறிதது அறிவித்துள்ளன. இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் நிவராண நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு 18 வயதாகும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையிலான அவர்களின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.