வயநாடு துயரம்.. தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கிய ராகுல் காந்தி!
திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சோகத்திலிருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை. எனவே அவர்களுக்கு உதவும் விதமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர், ராகுல் காந்தி தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜூலை 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன.

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டன. இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் இறங்கினர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 336 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.
நூற்றுக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். கேரளா இதுவரை பார்த்திராத இயற்கை பேரழிவாக இது இருக்கிறது. எனவே இந்த துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசும், காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. கேரள அரசு இந்த பேரழிவை மாநில பேரிடராக அறிவித்திருக்கிறது. ஆனால் மத்திய அரசுக்கு கேரள அமைச்சரவை கடிதம் எழுதியும், மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்துவிட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்றும், உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6000 வழங்கப்படும் என்றும் மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி கணக்குக்கு பலரும் தங்களால் முடிந்த தொகையை வழங்கி வருகின்றனர்.
இப்படி இருக்கையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார். அனைவரும் தாராளமாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications