"பாம்புகள் பாதுகாக்கும் போலீஸ் ஸ்டேஷன்.." தமிழக-கேரளா எல்லையில் ஒரு ஆச்சரியம்!
திருவனந்தபுரம்: இந்தியா உள்பட உலகம் முழுவதும் மக்களை போலீஸ்காரர்கள் பாதுகாத்து வரும் நிலையில் கேரளாவில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனை பாதுகாக்கும் பணியில் பாம்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஆம் நீங்கள் படித்தது சரிதான். கேரளாவில் உள்ள போலீஸ் நிலையத்தை பாதுகாப்புக்கும் பணியில் பாம்புகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாம்புகளுக்கு உயிர் இருக்காது.
அட இது என்ன புது கதையா இருக்குனு கேட்கிறீங்களா?... தொடர்ந்து படியுங்க.. போலீஸ் ஸ்டேஷனை காக்கும் உயிரற்ற பாம்புகள் பற்றியும், அதன் பின்னணியில் உள்ள விஷயமும் உங்களுக்கு நன்றாகவே புரியவரும்.

கேரளா போலீஸ் ஸ்டேஷன்
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கம்பம்மெட்டு போலீஸ் நிலையம் உள்ளது. கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள இந்த போலீஸ் நிலையம் வனப்பகுதியில் உள்ளது. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் போலீஸ் நிலையத்துக்கு அழையா விருந்தாளியாக வந்து செல்கின்றன. இது பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து ஆவணங்களை சேதப்படுத்தி விடுமோ? என்ற அச்சத்தில் போலீசார் இருந்தனர்.

எஸ்டேட் காவலாளி அட்வைஸ்
இது போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. மேலும் குரங்கு உள்பட பிற விலங்குகள் போலீஸ் நிலையத்துக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதுபற்றி பல பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இறுதியாக எஸ்டேட் காவலாளி ஒருவர் ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

ரப்பர் பாம்பு ‛டெக்னிக்’
அதாவது போலீஸ் நிலையத்தை சுற்றி ரப்பர் பாம்புகளை வைத்தால் அதனை பார்த்து குரங்குகள் வராது எனவும், தானும் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி வருவதாக கூறினார். இதையடுத்து கம்பம்மெட்டு போலீசார் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் பாம்புகளை வாங்கி போலீஸ் நிலையத்தை சுற்றி நிஜ பாம்பு போல் வைத்தனர். அதாவது போலீஸ் நிலையத்தின் ஜன்னல் கம்பி, மேலும் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மரங்களில் இந்த ரப்பர் பாம்புகள் தொங்கவிடப்பட்டுள்ளன. தற்போது இது பலன் கொடுத்துள்ளார். உண்மை பாம்புகள் என நினைத்து போலீஸ் நிலையத்துக்கு குரங்குகள் படையெடுப்பது தடுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக உள்ளது
இதுபற்றி கம்பம்மெட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிகே லால்பாய் கூறுகையில், ‛‛ரப்பர் பாம்புகளை பார்த்த பிறகு எந்த குரங்கும் ஸ்டேஷன் அருகே வரவில்லை. இது நிச்சயம் பலன் அளிக்கிறது. இருப்பினும் ஸ்டேஷன் வரும் மக்கள் உண்மையான பாம்பு என நினைத்து விடுகிறார்கள்'' என்றார். போலீஸ்காரர் சுனிஷ் கூறுகையில், ‛‛குரங்குகள் சில ஆண்டுகளாக ஸ்டேஷனில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தின. கும்பலாக வரும் குரங்குகள் ஸ்டேஷன் வளாகத்தில் சுற்றி திரிந்து காய்கறி தோட்டத்தை நாசம் செய்தது. மேலும் எங்களையும் பயமுறுத்தியது. ரப்பர் பாம்பு டெக்னிக்கை பயன்படுத்திய பிறகு குரங்குகள் ஸ்டேஷன்களுக்கு வரவில்லை. இது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications