தொடர் சாவு.. குடும்ப சாபம்! குமரி பெண் சாமியாரை வீட்டில் விட்ட கேரளா குடும்பம் - மொத்தமா போச்சே
திருவனந்தபுரம்: சாபத்தை போக்க பரிகார பூஜை நடத்துவதாக கூறி 55 சவரன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற கன்னியாகுமரியை சேர்ந்த பெண் மந்திரவாதி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேளர தலைநகர் திருவனந்தபுரம் வெள்ளாயணி பகுதியை சார்ந்தவர் விஸ்வம்பரன். இவரது குடும்பத்தில் தொடர் பலர் உயிரிழந்து வந்ததால் இவர் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார்.
இதன் காரணமாக விஸ்வம்பரன், ஜோதிடர் ஒருவரை சந்தித்து உள்ளார். அவரை சந்தித்த ஜோதிடரோ பரிகார பூஜை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பெண் சாமி
ஜோதிடரின் ஆலோசனைக்கு ஏற்ப குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சார்ந்த தெற்றியோடு தேவி என்று அழைக்கபடும் வித்யா என்ற பெண் மந்திரவாதியை சந்தித்து இருக்கிறார் விஸ்வம்பரன். இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் மந்திரவாதி அவரது வீட்டிற்கு நேரடியாக வந்து பரிகார பூஜை நடத்துவதாகவும் கூறி உள்ளார்.

வீட்டில் பரிகார பூஜை
சில நாட்களில் விஸ்வம்பரன் வீட்டிற்கு சென்ற அந்த பெண் மந்திரவாதி குடும்பத்திற்கு கடுமையான சாபம் இருப்பதாக கூறி வீட்டின் அறை ஒன்றை பரிகார பூஜை செய்வதற்கான அறையாகவும் மாற்றி உள்ளார். ஒரு வாரத்திற்கு மேல் பெண் சாமியாரும், அவருடன் வந்தவர்களும் சேர்ந்து இவரது வீட்டில் பூஜை நடத்தி உள்ளனர்.

நகை பணம் கொண்டு பூஜை
சாபம் இன்னும் முடியவில்லை என்றும், வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை வைத்தும் பூஜை செய்தால்தான், சாபம் போகும் என பெண் மந்திரவாதி தெரிவித்து இருக்கிறார். இதனை அப்படியே நம்பிய விஸ்வரம்பன் குடும்பத்தினர் 55 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாயை பணத்தை பூஜைக்காக கொடுத்து உள்ளனர்.

முடிந்த பூஜை
பூஜை முடித்த பின்பு இரு வாரத்திற்கு பின் தன்னிடம் கேட்டு விட்டு பூஜை அறையில் இருந்து நகையையும் , பணத்தை எடுக்கலாம் என கூறிய பெண் மந்திரவாதி, பின்னர் சாபம் இன்னும் முடியவில்லை என்றும் மூன்று மாதங்கள் கழித்து நகை, பணத்தை எடுங்கள் என கூறியுள்ளார். மூன்று மாதங்களுக்கு பின்னர் நகை மற்றும் பணத்தை எடுக்க முயன்றபோது ஒரு வருடம் கழிந்து எடுக்க சொல்லி உள்ளார் பெண் மந்திரவாதி.

குடும்பத்தினர் சந்தேகம்
இதனால் அவர் மீது விஸ்வரம்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து அவர்கள் பூஜை அறையை திறந்து பார்த்தபோது அவர்கள் பெண் சாமியார் வித்யாவிடம் கொடுத்த 55 சவரன் தங்க நகை மற்றும் பணமும் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கேரள மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளார்கள்.

போலீசார் வழக்குப்பதிவு
அவர்கள் அளித்த புகாரின் பேரில் நியமம் போலீசார், பெண் மந்திரவாதி மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூடநம்பிக்கையால் பெண் சாமியார் ஒரு குடும்பத்தையே 3 மாதங்களாக ஏமாற்றி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற இந்த சம்பவம் தற்போது கேரளாவிலும் , குமரியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications