கல்லீரல் தானம்.. சரியான நேரத்தில் தந்தையை காப்பாற்றிய மகள்! நாட்டின் இளம் 'ஆர்கன் டோனர்' இவர்தான்
பிரதீஷுக்கு நாள்பட்ட கல்லீரல் நோயுடன் புற்றுநோய் பாதிப்பும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு தன்னுடைய கல்லீரலை தானமாக வழங்கி அவரது உயிரை காப்பாற்றியுள்ளார் இளம்பெண் ஒருவர். அத்துடன் மிகவும் இளம் வயதில் உடலுறுப்பு தானம் செய்தவர் என்கிற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் பிரதீஷ். டீக்கடை நடத்தி வரும் இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்திருக்கிறது. அதேபோல எந்த உணவு எடுத்துக்கொண்டாலும் அது சரியாக செரிமானம் ஆகாமல் வாந்தியும் எடுத்துள்ளார். தொடக்கத்தில் இதனை சாதாரணமாக நினைத்து அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் அவ்வப்போது மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு தன்னை தானே சமாதானம் செய்துகொண்டுள்ளார்.
இப்படி இருக்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் வயிற்று வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நிலைமை கையை மீறி போவதை உணர்ந்த அவர், அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார். பரிசோதனையில் இவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் சில மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். இதனை உண்ட பின்னரும் இவருக்கு வலி குறையவில்லை.

கல்லீரல் நோய்
எனவே மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்த போது, இவரது கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கல்லீரலை அகற்ற வேண்டும், தவறும்பட்சத்தில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத குடும்பத்தினர் கல்லீரல் தானத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் நாட்கள் மட்டும் வெறுமென நகர்ந்துக்கொண்டேதான் இருந்திருக்கிறதே தவிர தானம் கொடுப்பதாக யாரும் முன்வரவில்லை. மறுபுறம் பிரதீஷின் உடல்நிலை மோசமாகியுள்ளது.

மகள் தேவநாடா
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இவரது 17 வயது மகள் தேவநாடா, தனது தந்தைக்கு தானே கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் இவரிடமிருந்து கல்லீரல் பெறப்பட்டால் பிரதீஷுக்கு சரியாக பொருந்தும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தேவநாடா தனது உடல் எடையை குறைக்க தொடங்கியுள்ளார். மருத்துவர்கள் கூறிய எடை இருந்தால்தான் கல்லீரல் எடுக்க முடியும். எனவே சீரான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கத்தை பின்பற்றி எடையை தேவநாடா குறைத்திருக்கிறார். அதேபோல அறுவை சிகிச்சைக்கு எல்லா ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை
அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது. மருத்துவமனை தேவநாடாவின் ஆதார் உள்ளிட்ட ஐடிகளை சேகரித்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு புதிய பிரச்னை கிளம்பியது. அதாவது தேவநாடாவுக்கு வயது 17தான். இந்தியாவை பொறுத்தவரை 18 வயதை கடந்தவர்கள்தான் உடலுறுப்பு தானம் செய்ய முடியும். எனவே மருத்துவமனை இந்த விஷயத்தில் கறாராக நின்றது. ஒரு பக்கம் உயிருக்கு போராடும் தனது தந்தை, மறுபுறம் மருத்துவமனையின் கறார் தன்மை என என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த தேவநாடாவின் குடும்பம் கடைசியாக நீதிமன்றத்தை நாடியது.

புற்றுநோய்
இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில், அனைத்து சூழல்களையும் நீதிபதிகள் ஆராய தொடங்கினர். இதற்கிடையில் மருத்துவமனையிலிருந்து மற்றொரு செய்தி வந்த சேர்ந்தது. அதாவது பிரதீஷ் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக இதனை அகற்றவில்லையெனில் இது மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்றும் கூறியது.

தானம்
இந்த மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் 17 வயது சிறுமி தேவநாடா தனது தந்தைக்கு உறுப்பு தானம் செய்யலாம் என்று அனுமதி வழங்கியது. இதனையடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவர் என்கிற பெருமையை தேவநாடா பெற்றிருக்கிறார். தற்போது இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications