பத்திரத்தில் கையெழுத்து போடுங்க.. மணப்பெண்ணிடம் மாப்பிள்ளை நண்பர்கள் பண்ணிய அலப்பறை.. ஏன் தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் திருமணத்துக்கு பிறகு நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்ற அனுமதிக்கும்படி திருமணப்பெண்ணிடம் மாப்பிள்ளையின் நண்பர்கள் 50 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
திருமணத்திற்கு முன்பு ஊருக்குள் பேட்டை ரவுடி என்று சொல்லும் அளவுக்கு சுற்றி வரும் பலரும் கல்யாணத்திற்கு பிறகு பொட்டி பாம்பாய் அடங்கிவிடுவதை நாம் பார்த்திருப்போம்.
80 கிட்ஸ் முதல் 2 கே கிட்ஸ் வரை இந்த பழக்கம் மட்டும் மாறவே இல்லை.

திருமணத்திற்கு முன்பு
திருமணத்திற்கு முன்பு விடுமுறை தினம் என்றால் பேட், பந்தோடு கிரிக்கெட் மைதானத்தில் சுற்றுவது முதல் பிற நாட்களில் ஊரில் இருக்கும் டீக்கடை, குட்டிச்சுவர் என எதிலாவது அமர்ந்து கொண்டு உள்ளூர் முதல் உலக விஷயங்கள் வரை பேசி ஜாலியாக நண்பர்கள் தங்கள் பொழுதை கழிப்பர். அப்பா.. அம்மா.. சத்தம் போட்டால் கூட இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் ஜாலியாக பைக்குகளில் சுற்றிக்கொண்டும் இரவு வெகும் நேரம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து இருக்கலாம்.

கல்யாணம் ஆகும் வரைதான்
ஆனால், இதெல்லாம் கல்யாணம் வரைதான். பெரும்பாலான இளைஞர்கள் திருமணம் முடித்த கையோடு, வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். இதனால் கல்யாணத்திற்கு முன்பு வரை ஒன்றாக கைகோர்த்து சுற்றிய நண்பன், வீட்டை விட்டு கூட வெளியில் வராமல் இருக்கிறானே... என சக நண்பர்கள் திட்டி தீர்த்துக் கொண்டு இருப்பார்கள். அதுவும் அவர்களுக்கு கல்யாணம் ஆகும் வரைதான். இதுதான் நம்ம ஊரில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் நிலையாக இருக்கிறது.

50 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம்
இந்த நிலையில், கேரளாவில் இப்படியான ஒரு நண்பர்கள், தங்கள் நண்பனின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது மணப்பெண்ணிடம் 50 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து வாங்கியிருக்கும் செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சுவாரசிய சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நட்பு வட்டம் சற்று பெரிது
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மலையகோடு பகுதியை சேர்ந்தவர் ரகு. அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ரகுவுக்கு நட்பு வட்டம் சற்று பெரிது. வேலை முடிந்து வீட்டுக்கு வருகிறாரோ.. இல்லையோ.. தவறாமல் நண்பர்களுடன் கூடி அரட்டையில் ஈடுபட மறுக்க மாட்டர். தினமும் 9 மணி வரை உள்ளூர் முதல் உலக அரசியல் வரை பேசிக்கொண்டு கலகலப்பாக இருக்கும் ரகு அதற்கு பிறகே வீட்டிற்கு செல்வார்.

ரகு அர்ச்சனா ஜோடி
இந்த நிலையில், ரகுவுக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் முடிவானது. வங்கி பணிகளுக்காக அர்ச்சனா தயாராகி வருகிறார். ரகுவுக்கும் அர்ச்சனாவிற்கும் கடந்த 5 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரகுவின் நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த நண்பர்கள் நேராக மணமகனை பார்க்காமல் மணப்பெண்ணிடம் போயிருக்கின்றனர். நண்பர்கள் ஏன் மொத்தமாக மணப்பெண்ணிடம் போகின்றனர் என்று போவதை திருமண வீட்டார் கவனித்து கொண்டிருந்தனர்.

வெளியில் சுற்ற அனுமதிக்க வேண்டும்
மணமகள் அர்ச்சனாவிடம் பேசிய ரகுவின் நண்பர்கள் திருமணத்திற்கு பிறகு எங்கள் நண்பனை முன்பு போல வெளியில் சுற்ற அனுமதிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளனர். நண்பர்களின் இந்த கோரிக்கையை சற்றும் எதிர்பார்க்காத மணப்பெண் அர்ச்சனா, ஒகே சொல்லியிருக்கிறார்.

பத்திரத்தில் கையெழுத்து
ஆனாலும் இந்த வாய் வார்த்தையெல்லாம் நம்ப மாட்டோம்.. ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு கொடுங்கள் என சொல்லி.. உடனடியாக 50 ரூபாய் பத்திரம் ஒன்றையும் வாங்கி அர்ச்சனாவின் கையெழுத்து வாங்கிவிட்டனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இந்த சம்பவத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். இது தொடர்பான ஒப்பந்தத்தின் பத்திர நகல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications