கேரளாவில் நாளை முதல் 5 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு.. என்னென்ன தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை முதல் 9-ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,853 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 153 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

பாஸிட்டிவ் ரேட் அதிகம்
கேரளாவில் ஏற்கனவே முழு ஊரடங்கு வருகிற 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தின் பாஸிட்டிவ் ரேட் 15.22 சதவீதம் என்று அதிகமாக உள்ளது. இதனால் நாளை முதல் 9-ம் தேதி கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி
இந்த 5 நாட்களும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள், தொழில்துறை நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் (பேக்கேஜிங் உட்பட) மற்றும் கட்டுமானப் பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். ஆனால் அத்தியாவசிய தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன்தான் இயங்க வேண்டும்.

வங்கிகள் இயங்கலாம்
அதே வேளையில் வங்கிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் இயங்குவது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நேரமும் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் அமலில் உள்ள மூன்று மடங்கு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் 10-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலத்தவர்களுக்கு கட்டுப்பாடு
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருப்பது அவசியம் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில் விநியோக முகவர்கள் உட்பட மாநிலத்திற்குள் பயண அனுமதி உள்ளவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications