கேரளாவின் "மதுவை" நினைவிருக்கிறதா? சாட்சியங்கள் காட்டிய விளையாட்டு.. ஹைகோர்ட் வழங்கிய பரபர தீர்ப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அட்டப்பாடியில் பசிக்காக உணவு திருடியதற்காக பழங்குடியின இளைஞர் ஒருவரை ஊர் மக்கள் சிலர் அடித்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ல் நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
ஆனால், சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீனை மறுத்துள்ளது உயர்நீதிமன்றம்.

ஜாமீன்
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடியில் கடந்த 2018ல் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நாடு முழுவதுமிருந்து இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகள் மேலெழுந்திருந்தன. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி டாக்ஸி ஓட்டுநர், கடைக்காரர் என 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மன்னார்க்காடு எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் இந்த 11 பேருக்கும் ஜாமீனை மறுத்தது.

மிரட்டல்
இதன் பின்னர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தங்களிடம் பேரம் பேசப்படுவதாக உயிரிழந்த மதுவின் தாய் மல்லி குற்றம்சாட்டியிருந்தார். சிலர் தங்களிடம் வந்து பணம் கொடுத்து வழக்கை திரும்பப்பெற வேண்டும் என கோரியதாகவும், தாங்கள் அப்பணத்தை வாங்க மறுத்த நிலையில், அவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் மல்லி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கேற்றதைப்போலவே மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் சாட்சியங்கள் முன்னுக்கு பின்னாக வாக்கு மூலம் அளித்தனர்.

கடிதம்
இது வழக்கின் போக்கையே மாற்றிவிடும் நிலையை ஏற்படுத்தியது. பின்னர் தான் மல்லி இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தில் மேற்குறிப்பிட்டவற்றை குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் தாய் மல்லியின் வீட்டுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமதுாகன் நேரில் சென்று தாய்க்கு ஆதரவு கூறினார். அதேபோல குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு துணை நிற்கும் என்பதையும் கூறினார்.

ஜாமீன் ரத்து உறுதி
தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில், மன்னார்க்காடு எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, ஜாமீனை ரத்து செய்ததுள்ளது. நீதிபதி கவுசர் எடப்பகத் இந்த உத்தரவை பிறப்பித்தார். ஆனால் மேல்முறையீடு செய்த 11 பேரில் ஒருவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேபோல குற்றம்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகளிடையே தங்களது செல்வாக்கை செலுத்தி அதனை மாற்ற முயற்சித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications