தாய்நிலம் திரும்பும் அரிகொம்பன் யானை.. கேரளா எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் நடமாட்டம்!
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டின் களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட அரிகொம்பன் எனும் அரிசி கொம்பன் யானை தற்போது கேரளா எல்லையில் இருந்து 15 கி.,மீ தொலைவில் முகாமிட்டுள்ளது.
கேரளாவின் மூணாறு சின்னக்கானல் பகுதியை பூர்வீகமாக கொண்டது அரி கொம்பன் எனும் அரிசி கொம்பன் யானை. அரிசியை அதிகமாக தேடிப் போய் உண்பதால் அரி கொம்பன் என கேரளாவிலும் அரிசி கொம்பன் என தமிழ்நாட்டிலும் இந்த யானை அழைக்கப்பட்டது. கேரளாவில் அரிகொம்பன் யானை மூர்க்கமாக நடந்து கொண்டதாலும் 10க்கும் மேற்பட்டோரை பலி கொண்டதாலும் கேரளா வனத்துறையால் ஏப்ரல் 29-ந் தேதி மூணாறு சின்னக்கானல் சிமெண்ட் பாலம் அருகே மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்டது அரிகொம்பன் யானை.

அங்கிருந்து தேக்கடி புலிகள் சரணாலயம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வனப்பகுதிக்குள் கொண்டுவிடப்பட்டது அரிகொம்பன் யானை. ஆனால் வனப்பகுதி வழியாக தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்துக்குள் நுழைந்தது அரிகொம்பன். கம்பம் நகரில் வீதி உலா வந்ததால் அந்நகரத்தில் 144 தடை உத்தரவு போடும் நிலைமை உருவானது. ஒரு வாரம் தமிழ்நாட்டு எல்லையில் ,மிரட்டல் விடுத்த அரிகொம்பன், சின்ன ஓபுலாபுரம் பகுதியில் பிடிக்கப்பட்டு களக்காடு பகுதியில் கொண்டுபோய்விடப்பட்டது.
களக்காடு பகுதியில் விடப்பட்ட அரிகொம்பன் யானையை தமிழ்நாடு, கேரளா வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குட்டியாறு அணை பகுதியில் நடமாடி வரும் அரிகொம்பன் எப்போது வேண்டுமானாலும் கேரளா வனப்பகுதிக்குள் நுழையலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது கேரளா வனப்பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அரிகொம்பன் நடமாடுவதால் தாங்கள் உன்னிப்பாக கவனிப்பதாக கேரளா வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தமிழ்நாடு வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு, அரிகொம்பன் உறங்குவதாக வெளியிட்ட வீடியோவால் சர்ச்சையானது. அந்த வீடியோ வேறொரு யானையின் உறக்கம் தொடர்பானது; பழைய வீடியோ என நெட்டிசன்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அந்த வீடியோவை அதிகாரி சுப்ரியா சாகு அந்த வீடியோவை தமது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications