20 மணி நேரம்தான்.. வயநாட்டில் எஃகினால் உருவாக்கப்பட்ட பாலம்! இந்திய ராணுவத்திற்கு ராயல் சல்யூட்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிக்கு சவாலாக மழை இருந்தபோதிலும் வெறும் இருபது மணி நேரத்தில் எஃகினால் உருவாக்கப்பட்ட பெய்லி பாலத்தை அமைத்திருக்கின்றனர் இந்திய ராணுவத்தினர். பெய்லி முறையில் அந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் இருந்து அந்த வகை பாலம் ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுமைக்குமே பெரிய வடுவாக அமைந்திருக்கிறது வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு. கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மண்ணை மூடி 300க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி இருக்கிறது இயற்கை.

தொடர்ந்து மனிதநேயம் துளிர்க்க அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், தன்னார்வர்களுடன் இணைந்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்திய ராணுவமும் மீட்பு பணியில் கைகோர்த்து இருக்கிறது. சூரல்மலையும் முண்டக்கையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சூரல் மலைப்பகுதியில் மீட்பு பணிகள் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக நடந்தது. ஆனால் குறுக்கே பாயும் சாலியாறு இதற்கு தடையாக அமைந்தது. இதனால் முண்டக்கை பகுதியை அவ்வளவு எளிதாக அணுக முடியவில்லை. பாய்ந்தோடி வரும் வெள்ளத்தைக் கடந்து செல்வது பெரிய சவாலாக இருந்தது.
இதை அடுத்து வான் வழியாக முண்டக்கை சென்ற டெல்டா ஸ்குவாட் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ராணுவ ட்ரக்குகள், ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதை அடுத்து பெய்லி முறையில் இந்திய ராணுவம் எஃகு பாலம் ஒன்றை அமைத்தது. மெட்ராஸ் இன்ஜினியரிங் படைப்பிரிவினர் இந்த பாலத்தை அமைத்தனர்.
குறுகலான இடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் போதே ஆற்றில் இறங்கி நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் முயற்சியில் ஈடுபட்டனர். பெய்லி பாலத்தை அமைக்கும் பணியின் போது மழையும் பெரிய சிக்கலாக உருவெடுத்தது. இருந்த போதும் 20 மணி நேரத்தில் இந்த பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து முதன்முதலாக ராணுவ வாகனம் ஒன்று அந்தப் பாலத்தை வெற்றிகரமாக கடந்தது. பெய்லி பாலத்தில் முதல் வாகனமாக ராணுவ மேஜர் ஜெனரல் மேத்யூஸ் தனது வாகனத்தில் சென்றார். தொடர்ந்து ராணுவ வாகனம், பொக்லைன் இயந்திரங்கள் பாலத்தை கடந்து சென்றன.
70 மீட்டர் நீளம் கொண்ட சாலியாட்டின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் எக்கு பாலம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. பெய்லி முறை பாலம் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயற்கை பேரிடர்கள், பெரிய அளவிலான போர்கள் போன்ற நேரங்களில் ஆறுகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்டவற்றை ராணுவ வாகனங்கள் கடந்து செல்ல பால அமைப்பு தேவைப்பட்டது.
வேகமாக அமைக்க வேண்டும், செலவும் குறைவாக இருக்க வேண்டுமென உலக நாடுகளின் இராணுவங்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டன. இதை அடுத்து டொனால்ட் பெய்லி என்பவர் எஃகு மூலம் தளவாடங்களை உருவாக்கி அதன் மூலம் பாலத்தை கட்டமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இந்த பாலம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து பெயிலியின் பெயரே பாலத்துக்கும் சூட்டப்பட்டது.
தற்போது இந்த பாலம் தான் வயநாட்டின் சூரல்மலையையும் முண்டக்கையையும் இணைத்து இருக்கிறது. 24 டன் எடை தாங்கு சக்தி கொண்ட இந்த பாலத்தின் மூலம் லாரிகள் ஆம்புலன்ஸ்கள் கடந்து வருகிறது. இதற்கு தேவையான தளவாடங்கள் தலைநகர் டெல்லி மட்டும் பெங்களூரில் இருந்து ராணுவ விமானங்கள் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக வயநாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 20 மணி நேரத்திற்குள் இந்த பாலத்தை இந்திய ராணுவத்தினர் கட்டமைத்திருக்கின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications