சென்னைக்கு பக்கத்திலேயே.. இப்படி ஒரு ஜில் ஜில் அருவியா! கைலாசா கோனா போலாமா? ஒரு நாள் லீவ் போதும்
சென்னை: ஜூன் மாதமாகியும் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னையிலிருந்து 100 கிமீ தொலைவிற்குள் ஒரு குளிர்ச்சியான அருவி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? வாருங்கள் இந்த கட்டுரையின் மூலமாக அருவியை சுற்றிப் பார்க்கலாம்.
"எப்பா.. என்னா வெயிலு.. ஜூன் மாசமாகியும் விடலையே.. ஒரு மோர் கொடுங்கண்ணே!" என மக்களை புலம்ப வைத்து இருக்கிறது தலைநகர் சென்னையை வாட்டி வதைத்து வரும் சூரியன். வெயில் குறையாத நிலையில் நாளை பள்ளிகளும் திறக்க இருப்பதால் குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல விடுமுறை கிடைப்பதும் கடினம்.

இப்படி சென்னையில் இக்கட்டான நிலையில் இருப்பவர்கள், வார விடுமுறை கிடைக்கும் ஒரே நாளில் ஜாலியாக குளிர்ச்சியான பகுதிக்கு டூர் போய்விட்டு வரும் அளவுக்கு ஒரு கூலான டூரிஸ்ட் ஸ்பாட் இருக்கிறது. அப்படி என்ன பகுதி? அங்கு எப்படி செல்வது என்பன போன்ற தகவல்களை நாம் விரிவாக பார்ப்போம்.
கோடை வெயிலில் தகிக்கும் கான்கிரீட் காடான சென்னைக்கு ஒரு நாள் விடைகொடுத்துவிட்டு, எட்டும் திசையெங்கும் பச்சை போர்வை போர்த்தியதைபோல் பசுமையாக காட்சியளிக்கும் ஒரு பகுதி சென்னையில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அல்ல. அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில்.
அதுதான் கைலாசாகோனா அருவி. ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் இருக்கும் தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டமான சித்தூரில்தான் இந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகான அருவி உள்ளது. அடிக்கும் வெயிலுக்கு இந்த அருவியில் தண்ணீர் வருமா என்று கேட்டால், மே, ஜூன் மாதங்களில் போய் ஜமாய்க்கலாம் என்று சொல்கிறார்கள் அனுபவித்து வந்தவர்கள்.
சரி, மலை உச்சியில் இருந்து கொட்டும் தண்ணீர், அடிக்கும் வெயில் பட்டு சூடாக இருக்குமே என்று அஞ்ச வேண்டாம். அவ்வளவு சில்லென்று இருக்கிறதாம். மாதக்கணக்கில் சென்னை வெயிலில் கருகிய நம் மேனிக்கு கைலாசாகோனா அருவியில் கொட்டும் நீர் மருந்துபோல் இருக்கும். மருந்துபோன்றா.. மருந்தேதான்.
ஆம், மலை உச்சியில் இருந்து கொட்டும் நீரில் இயற்கையான தாது பொருட்கள் கலந்து இருப்பதால் உடல்நலனுக்கு நன்மை தரும். அருவியில் குளிப்பதற்கு இவ்வளவு தூரம் போக வேண்டுமா? என்று சலித்துக்கொள்ள வேண்டாம். இங்கு போனசாக இன்னொரு விசயமும் உள்ளது. அதுதான் டிரெக்கிங். மலையேற்ற பிரியர்கள், இயற்கை விரும்பிகள், திரில்லிங்கான அனுபவத்தை எதிர்பார்ப்பவர்கள் கைலாசகோனா மலைப்பகுதியில் டிரெக்கிங் செய்யலாம்.

ஆனால், திடகாத்திரமான உடலும், மலையேற்றத்துக்கான அடிப்படை பயிற்சியும், போதிய பாதுகாப்புடனும் வந்திருந்தால் மகிழ்ச்சியோடு அதையும் அனுபவிக்கலாம். அதே நேரம் காட்டின் உரிமையாளர்களான குரங்குகளை கைலாசாகோனா அருவி பகுதியில் அதிகம் காண முடியும். எனவே உங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னையில் இருந்து கார் அல்லது சித்தூர் செல்லும் பேருந்தின் மூலமாக இந்த அருவியை அடையலாம். 2 நாள் விடுமுறை கிடைத்தால் அதன் அருகிலேயே விடுதியில் தங்கி முழுமையாக ஜாலி செய்துவிட்டு வரலாம்.
பின்குறிப்பு: இயற்கை கொடுத்த இந்த அழகிய பகுதியை எதிர்கால தலைமுறையினரும் நம்மைபோல் அனுபவிக்க அங்கு பிளாஸ்டிக் கவர்களை தூக்கிவிசிவிட்டு வருவது, சோப், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.












Click it and Unblock the Notifications