Nellaiappar Temple: நெல்லையப்பர் கோயில் சமபந்தியில்.. நரிக்குறவர்கள் சிறுவர்கள் புறக்கணிப்பா? சிசிடிவி காட்சி வெளியானது
நெல்லை: அண்ணா நினைவுநாளையொட்டி நெல்லையப்பர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் நரிக்குறவர்கள் சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு அவர் விரிவாக என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அரசு சார்பில் இலவச அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி தான் நெல்லையப்பர் கோவிலிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நெல்லையப்பர் அன்னதான நிகழ்ச்சி
நெல்லையில் நடந்த இந்த அன்னதானம் நிகழ்ச்சியினை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மேயர் ராமகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பக்தர்களும் அன்னதானம் உண்டனர். அப்போது நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் 5 பேர் அன்னதான உணவு உண்பதற்காக வந்ததாகவும், ஆனால் அவர்களை அனுமதிக்காமல் வெளியே அனுப்பப்பட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியது.
இதுதான் திமுக அரசின் சமூக நீதியா?
அந்த வீடியோவில் ஒருவர் சிறுவர், சிறுமிகளை அழைத்து வருவது போன்றும், அப்போது கோவில் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவது போன்றும், பின்னர் அந்த நபர் அவர்களுக்கு அருகே உள்ள ஹோட்டலில் சாப்பாடு வாங்கி கொடுப்பது போன்றும் இருந்தது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இதுதான் திமுக அரசின் சமூக நீதியா என கேள்வி எழுப்ப தொடங்கினர்.
சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சியளிப்பதாகவும் சிலர் விமர்சித்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நெல்லையப்பர் கோயிலில் நடந்த அன்னதானத்தில் மொத்தம் 900 பேர் பங்கேற்றனர்.
நெல்லை மேயர் விளக்கம்

அன்னதானத்தில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கெல்லாம் உணவு வழங்கப்பட்டது. யாருமே வராமல் இருந்ததால் ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பார்த்தோம். ஆனால் யாரும் வரவில்லை என்பதாலும், உணவுகள் தீர்ந்துபோனதாலும் அன்னதானத்தை முடித்தோம். அந்த நேரத்தில் தேருக்கு அடியில் அமர்ந்திருந்த 5 சிறுவர்களை ஒருவர் அழைத்து வந்தார்.
அந்த நபர் யார் தூண்டுதலின் பெயரில் சிறுவர், சிறுமிகளை அழைத்து வந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். அப்போது நாங்கள் உணவு தீர்ந்துவிட்டது என்று தெளிவாக கூறிவிட்டோம். ஆனால் அதனை புரிந்துகொள்ளாமல் தேவையின்றி சிலரிடம் பணம் வசூல் செய்துகொண்டு அந்த நபர் 4 சிறுவர் சிறுமிகளுக்கு உணவு வாங்கி கொடுத்து இருக்கிறார்.
சிசிடிவி வீடியோ காட்சி வெளியீடு
நம் முதல்வர் ஸ்டாலினே அவர்களது வீடுகளுக்கு சென்று உணவு அருந்தியிருக்கும் போது அவர்களது சகோதரர்களான நாங்களும் யாரிடமும் பாகுபாடு காட்ட மாட்டோம். தேர்தல் நேரம் என்பதால், ஆன்மீகத்தைக் கொண்டு அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறினார்.
மேலும் கோவிலில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சிகளையும் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் ஒருவர் சிறுவர் சிறுமிகளை அழைத்துக் கொண்டு வருவது போன்றும், அன்னதானம் முடிந்துவிட்டது என்று கோவில் ஊழியர் ஒருவர் தெளிவாக கூறுவதும் பதிவாகி இருந்தது.












Click it and Unblock the Notifications