நெல்லையில் தொடர்மழையால் நிரம்பிய அணைகள்: தாமிரபரணியில் பெருகிய வெள்ளம் - செல்பி எடுக்கத் தடை
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
திருநெல்வேலி: பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நெல்லை மாவட்ட மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க, செல்பி புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின்காரணமாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 41 மில்லி மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 28 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு பகுதியில் 20 மில்லி மீட்டரும், நம்பியாறு பகுதியில் 29 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு பகுதியில் 70 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரம் பகுதியில் 17 மில்லி மீட்டரும், சேரன்மகா தேவி பகுதியில் 11 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 16 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கொடுமுடியாறு பகுதியில் 70 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 52.6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
போலி மருத்துவமனைகள் பற்றி செய்தி வெளியிட்ட செய்தியாளர்.. பீகாரில் எரித்துக் கொலை.. உடல் கண்டெடுப்பு!
அணைகள் நிரம்பின
பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையில் இருந்து உபரி நீராக 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மழை தொடர்ந்து நீடித்ததால் தண்ணீர் அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் கனஅடி நீர் வரை திறந்து விடப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
இதனால் பாபாநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல தென்காசி மாவட்டம் கடனாநதி அணையில் இருந்து 1 ஆயிரத்து 500 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இது தவிர, ஆங்காங்கே ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் ஆகியவை இணைந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் வந்துகொண்டிருக்கும் நிலையில் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
தற்போது பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 8.300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் 67 இடங்களில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாமிரபரணி நதிக் கரைகளில் உள்ள படித் துறைகள் மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் போன்றவைகளில் போலீசார் ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நம்பியாறு உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நம்பி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த கண்காணிப்பு
நெல்லை மாவட்டத்தில் பேரிடர் பயிற்சி பெற்ற காவல் துறை, தீயணைப்பு துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் சுமார் 400 பேர் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் கண்காணிப்பு பணியிலும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
ஆற்றில் குளிக்கத் தடை
நெல்லை மாநகர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து ஒலிப்பெருக்கி மூலம் தாழ்வான பகுதிகள் மற்றும் தாமிரபரணி நதிக் கரைகளில் போலீசார் எச்சரிக்கை தகவல்களை விடுத்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் குளிக்க, செல்பி புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.