ரத்தத்திற்காக தெரு தெருவாக அலைந்த ஏழுமலை.. கடவுளாக வந்த கான்ஸ்டபிள் சையது.. திருச்சியில் நெகிழ்ச்சி!
திருச்சி: கொரோனா காலத்தில் லாக்டவுன் காரணமாக மக்கள் வெளியே செல்ல சிரமப்பட்டு வரும் நிலையில்.. திருச்சியில் ரத்தத்திற்காக இளைஞர் ஒருவர் தெரு தெருவாக அலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் வாங்க கூட அனுமதிக்காத வகையில் மிக தீவிரமான லாக்டவுன் போடப்பட்டுள்ளது.
அதே சமயம் வெளியே வரும் மக்களை அடிக்க கூடாது, தாக்க கூடாது, அவசரமாக வரும் மக்களிடம் போலீஸ் கண்டிப்பு காட்டினாலும், கனிவுடன் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் திருச்சியில் நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
திருச்சி
திருச்சியை சேர்ந்த ஏழுமலை என்பவர் தனது மனைவி சுலோச்சனாவை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, மருத்துவமனைக்கு வெளியே காத்து இருந்திருக்கிறார். ஆனால் சிகிச்சைக்கு சென்ற சுலோச்சனாவிற்கு சுகப்பிரசவம் செய்யும் சூழ்நிலை இல்லை, உடனே சி செக்சன் செய்ய வேண்டும். உடனே ரத்தம் தேவை என்று கூறியுள்ளனர்.
மருத்துவமனை
மருத்துவமனையில் அப்போது ரத்தம் இல்லை. கொரோனா காலம் என்பதால் மற்ற மருத்துவமனை பிளட் பேங்கில் ரத்தம் இல்லை. இதனால் ஏழுமலையிடம் எப்படியாவது ரத்தம் கொண்டு வாருங்கள் என்று மருத்துவமனை கூறியுள்ளது. ரத்தம் கொடுக்க யாரையாவது அழைத்து வாருங்கள், ஓ பாசிட்டிவ் தேவை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
நண்பர்கள்
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வந்த ஏழுமலை ரத்தம் வேண்டி, நண்பர்களை பார்ப்பதற்காக திருச்சியில் பல்வேறு தெருக்களுக்கு சென்று இருக்கிறார். தனக்கு தெரிந்தவர்கள் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று இருக்கிறார். லாக்டவுன் நேரத்தில் ஏழுமலை இப்படி சுற்றியதை பார்த்த போலீஸ் அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
பிளட்
நடந்த சம்பவத்தை ஏழுமலை விளக்கவே.. அங்கிருந்த கான்ஸ்டபிள் சையது அபுதாஹிர் உடனே ரத்தம் கொடுக்க முன் வந்துள்ளார். நான் ஓ பாசிட்டிவ்தான்.. வாங்க மருத்துவமனை போகலாம் என்று ஏழுமலையோடு சேர்ந்து மருத்துவமனை சென்றுள்ளார். சரியான நேரத்தில் சையது அபுதாஹிர் ரத்தம் கொடுக்கவே, ஏழுமலையின் மனைவி சுலோச்சனாவிற்கு பிரசவம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.
உதவி
இந்த தகவல் தெரிந்தவுடன் திருச்சி எஸ்பி, டிஜிபி, கமிஷ்னர் ஆகியோர் கான்ஸ்டபிள் சையது அபுதாஹிருக்கு பரிசுத்தொகையாக 25 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளனர். ஆனால் அதையும் கூட சையது அபுதாஹிர் ஏழுமலையிடம் சிகிச்சைக்காக கொடுத்துள்ளார். சி செக்சன் என்பதால் செலவிற்காக 25 ஆயிரம் ரூபாயை மொத்தமாக கொடுத்துள்ளார். கான்ஸ்டபிள் சையது அபுதாஹிர் செய்த இந்த உதவி திருச்சி மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.