சாயம் போகாத கட்சி திமுக.. ஜெயக்குமார் தெரிந்துகொள்ள வேண்டும்.. அமைச்சர் கேஎன் நேரு பதிலடி!
திருச்சி: சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.என். நேரு பதிலடி கொடுத்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 90 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் அனைத்து பணிகளும் முடிவடையும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் அனைத்து துறை அதிகாரிகளை கொண்ட வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் விமர்சனம்
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், திமுக 95 சதவிகிதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது. போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்திருக்க வேண்டும். இந்த ஆட்சியில் லேபிள் ஒட்டும் பணியை மட்டும் தான் செய்து வருகிறார்கள். நாங்கள் அடிக்கல் நாட்டி முடித்த பணியை தொடங்கி வைப்பார்கள். இது தான் திமுகவின் வேலை. மழை வந்தால் திமுகவின் சாயம் வெளுத்து விடும் என்று விமர்சித்தார்.

திட்டங்கள் தொடக்கம்
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கேஎன் நேரு கூறுகையில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி ரூ.159 கோடியிலும், பல்வகை பயன்பாட்டு மையம் ரூ.84.8 கோடி, சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்புகள் வசதிகள் ரூ.40.30 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஓராண்டில் நிறைவு
இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஒரு ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும். அதேபோல் திருச்சியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், பணிகள் தாமதமாகியுள்ளது. இதனால் மழைக்காலம் முடிவந்த பின் சாலை வசதிகள் முடிக்கப்படும். அதேபோல் காவேரி பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்கள் விரைவில் வரவிருக்கிறது என்று தெரிவித்தார்.

ஜெயக்குமாருக்கு பதிலடி
தொடர்ந்து ஜெயக்குமார் விமர்சனம் பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஆனால் திமுக ஒரே ஆண்டில் திருச்சியில் மட்டும் எவ்வளவு திட்டங்களை தொடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி கொஞ்சம் கூறட்டும். அதனால் சாயம் போகாத கட்சி திமுக. அவர்களின் சாயம் வேண்டுமானால் வெளுக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications