சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நள்ளிரவில் வெளுக்க போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல் கோவை, ஈரோடு, திருப்பூரிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் இரவு 9 மணியளவில் சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரி, நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தொடங்கி 14ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications