வானில் சிவப்பு தக்காளி.. சென்னையில் 1 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை.. இப்பவே கொட்டுதே.. ஜில் தமிழ்நாடு
சென்னை: சென்னையில் நேற்றிரவு பலத்த மழை பெய்துள்ள நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.. அத்துடன் கடும் வெயிலும் நிலவி வருகிறது. ஆனால், எங்கெல்லாம் வெயில் அதிகமாக இருந்ததோ, அங்கெல்லாம்கூட, மழை வெளுத்து வாங்கிவிடுகிறது.

தற்போது, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழையும், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதன்படி, ஜூலை 10ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
நல்ல மழை: அதுமட்டுமல்ல, ஜூலை 11 வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவித்திருக்கிறது. அந்தவகையில், பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு காணப்பட்டது.
சென்னையில், நேற்று முன்தினம் இரவு தென்சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர், சிறுசேரி, சோழிங்கநல்லூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் மழை அதிக அளவில் பெய்த நிலையில், நேற்றிரவும் சென்னையில் மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியானது.
சிவப்பு தக்காளி: இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்லும்போது, "பாண்டிச்சேரியை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டுக்கான நேரம் இது. சிவப்பு தக்காளியை போல சென்னைக்கு நெருக்கமாக மழை மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. இது வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இது தீவிரம் குறையாமல் நகருமேயானால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் டமால், டுமீல் என இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
அதன்படியே, நேற்றிரவு சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது... அத்துடன், பலத்த காற்றுடன் நள்ளிரவு 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சென்னை குளிர்ந்துவிட்டது.. நேற்றிரவு சென்னையில் வெளுத்த மழை குறித்து பிரதீப் ஜான் மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
1 மாதம் மழை: "ஜூலை மாதத்தில் சென்னையில் சராசரியாக 10 சென்டிமீட்டர் மழை பெய்யும் நிலையில், கடந்த ஒரு வாரத்திலேயே சென்னையில் 10 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. 1996ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவு மழை பெய்துள்ள நிலையில், ஜூலை மாதமும் அதிக மழை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.
வருகிற 11ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கும் நிலையில், பிரதீப் ஜானும் கூறியிருப்பது, பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications