ஏப்.21 வரை மழை வெளுக்கும்.. ஒருபக்கம் புழுக்கம்.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை அப்டேட்!
சென்னை: வரும் 21ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 19ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.நேற்று வேலூர், மதுரை, ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு காரணமாக மக்கள் கடும் புழுக்கத்தால் (Humidity) அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மழை மற்றும் வெயில் குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. சுமார் 0.9 கி.மீ உயரத்தில், மரத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 21 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம் மற்றும் புதுச்சேயில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
இன்று முதல் 21 வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். இதன் காரணமாக திக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications