For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் சென்னை-'டான்சி' புகழ் பாரதி நாடாளுமன்றம் போவாரா?

By Staff
Google Oneindia Tamil News

Bharathi
சென்னை: தென் சென்னை தொகுதியின் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆர்.எஸ். பாரதி, ஆலந்தூர் நகராட்சித் தலைவராக 23 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

சுறுசுறுப்பான நகராட்சித் தலைவராக இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக ஆலந்தூர் நகராட்சித் தலைவராகப் பணியாற்றி வருகிறார் ஆர்.எஸ்.பாரதி.

ஆலந்தூர் நகராட்சியில் உள்ள மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர் பாரதி. அரசாங்கமே செய்யட்டும் என எண்ணும் மக்களுக்கு மத்தியில், அவர்களையும் பணியில் ஈடுபடுத்தி ஆலந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்தவர் பாரதி. இந்தத் திட்டத்துக்காக பல விருதுகளையும் வென்றவர்.

பி.ஏ, பி.எல். படித்துள்ள பாரதியின் தந்தை பெயர் ராமன், தாயார் விஜயலட்சுமி. டாக்டர் சம்பூரமணம் என்ற மனைவியும், லட்சுமிகாந்தன் பாரதி, ஜெயகாந்தன் பாரதி என இரு மகன்கள் உள்ளனர்.

1986ம் ஆண்டு முதல் முறையாக ஆலந்தூர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் தொடர்ந்து நான்கு முறை நகராட்சித் தலைவராக இவரே தேர்வாகி வருகிறார். தமிழக நகராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் செயல்படுகிறார்.

திமுக சட்டத் துறை செயலாளராக இருக்கும் பாரதி, சிறந்த மக்கள் சேவைக்காக பல விருதுகளையும் பெற்றவர்.

டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிக்கி பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்ததற்கு ஆர்.எஸ்.பாரதிதான் முக்கிய காரணம். காரணம், அவர்தான் அந்த ஊழல் வழக்கை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் இணைந்து இந்த கேஸ் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது தான் ரவுடிக் கும்பலை அனுப்பினார் 'புரட்சிகரமான தலைவி'.

அப்போது தான் கிளம்பி வெளியே போன பாரதி தப்பிவிட்டார். சண்முகசுந்தரம் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலில் அவரது 2 விரல்களே தனியே துண்டாகிப் போய் விழுந்தன. (அவரை அந்த இரவு நேரத்தில் குற்றியிரும் குலை உயிருமாக தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தபோது உளவுப் பிரிவினர் மூலம் தகவல் கிடைத்து அங்கே முதல் நிருபராக நான் போய் நின்றது நினைவுக்கு வருகிறது. அடுத்த சில நிமிடங்களில் திமுக தலைவர் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, மறைந்த என்.வி.என். சோமு ஆகியோர் ஓடி வந்தனர்- ஆசிரியர்)

அந்த பயங்கர தாக்குதலுக்குப் பிறகும் பாரதி அந்த வழக்கில் தொடர்ந்து தீவிரம் காட்டியது அவரது 'தில்'லுக்கு சாட்சி.

இவ்வளவு காலம் பதவியில் இருந்துவிட்டாலும் மக்களுடனான தொடர்பை பேணுவதில் தீவிரமான நபர் என்ற வகையில் பாரதி நல்ல சாய்ஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X