ஆந்திரா அருகில் மீன்பிடிக்க எதிர்ப்பு... 150 தமிழக மீனவர்களை சிறைபிடித்து அட்டகாசம்
ஆந்திர மாநிலம் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 150 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மங்களாபுரம்: ஆந்திரா அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேடு மீனவர்கள் 150 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதியில் இருந்து மீனவர்கள் ஆந்திர கடற்பகுதியின் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காசிமேட்டைச் சேர்ந்த 150 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் ஆந்திராவில் உள்ள மங்களாபுரம் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 150 மீனவர்கள் ஒரே நேரத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர் சிறைபிடிப்பு
கடந்த 22ம் தேதி ஆந்திர கடற்பகுதி அருகில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் மீன்பிடிக்கச் சென்ற 300 தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர். இதற்கு முன்னர், மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 16ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 31 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
தமிழக மீனவர்கள் மண்ணூர் மற்றும் கிருஷ்ணாபுரம் அருகில் மீன் பிடிக்கக் கூடாது என்று ஆந்திர மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது மங்களாபுரம் அருகிலும் மீன் பிடிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அட்டூழியம்
அண்டை நாடாக இருக்கும் இலங்கை, தமிழக மீனவர்களை சிறைபிடித்து படகுகளை பிடுங்கிக் கொண்டும், வலைகளை அறுத்தும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூலை 6ம் தேதி தமிழக மீனவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரவும் தீட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டால் 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் விதிக்க இலங்கை அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.
தமிழக மீனவர் கவலை
இந்நிலையில், சொந்த நாட்டிலேயே மீன் பிடிக்க முடியாமல் தமிழக மீனவர்கள் தவித்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் ஆந்திரா கடற்பகுதியின் அருகில் சென்றாலே சிறைபிடிப்பது சமீப காலத்தில அதிகரித்து வருவது மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தேவை நடவடிக்கை
ஆந்திரா அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் கோரியுள்ளனர்.