குடியரசு தின விழாவில்...சூயிங்கம்மை மென்று கையால் எடுத்து திருப்பி வாயில் போட்ட ஒபாமா!
டெல்லி: இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா வாயில் சுயிங்கம் சுவைத்துக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், இந்திய ராணுவ பலத்தை காண்பிக்கும் வகையில் அணி வகுப்புகள் நடந்தன.
ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் தங்கள் பராக்கிரமத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன. அப்போது, கேமரா அவ்வப்போது, ஒபாமா பக்கமும் திரும்பியது. சில நேரங்களில் தலையை ஆட்டியபடி ரசனையை வெளிப்படுத்தியபடி இருந்ததை மக்கள் பார்க்க முடிந்தது.
ஆனால் ஒருமுறை கேமரா அவர் பக்கம் திரும்பியபோது, ஒபாமா தனது வாயில் இருந்து சுயிங்கத்தை வெளியில் எடுத்து மீண்டும் தனது வாய்க்குள் போட்டுக் கொண்ட காட்சி பதிவானது. இந்த காட்சி, உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒபாமா மென்றது சுயிங்கம் இல்லை என்றும், சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சுயிங்கம் மாதிரியான நிக்கோடின் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, தனது செய்திதளத்தில் இதுகுறித்து கூறுகையில், "சிகரெட் பழக்கத்தில் இருந்து வெளியேவர ஒபாமா நிகோடின் பயன்படுத்திவருகிறார். இந்திய குடியரசு தின ஊர்வலத்தின்போதும், உதவியாளர்கள் அதை அவருக்கு தந்திருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கான வெள்ளை மாளிகை தலைமை நிருபர் பீட்டர் பாகர் தனது டிவிட்டிலும், சுயிங்கம் போன்ற ஒரு பொருளை ஒபாமா மென்று கொண்டிருந்ததாக உறுதி செய்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டிலும், ஒபாமா சுயிங்கம் சாப்பிட்டபடி இருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது நினைவிருக்கலாம்.