பேறுகால வலியில் துடித்த முஸ்லிம் பெண்ணுக்கு விநாயகர் கோயிலுக்குள் பிரசவம் பார்த்த இந்து பெண்கள்
மும்பை: பேறுகால வலியில் துடித்த இஸ்லாமிய பெண்ணுக்கு இந்து கோயிலுக்குள் வைத்து பேறுகாலம் பார்த்து தாய், குழந்தையை காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பை அன்டாப் ஹில் பகுதியை சேர்ந்தவர் இலியாஸ் ஷெய்க் (27). அவரது மனைவி நூர் ஜஹான் (24). 2வது முறையாக கருவுற்றிருந்த நூர்ஜஹானுக்கு, அக்டோபர் 5ம் தேதி பிரசவ தேதியாக டாக்டர்களால் குறித்து கொடுக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை 4.30 மணிக்கு திடீரென பேறுகால வலியால் துடித்துள்ளார் நூர்ஜஹான்.
டாக்சி ஒன்றில் கணவரோடு ஆஸ்பத்திரி நோக்கி பயணப்பட்டார். ஆனால் வலி அதிகமாகி நூர்ஜஹான் துடித்ததை பார்த்து பயந்த, டாக்சி டிரைவர், வடாலா என்ற பகுதியில் காரை நிறுத்தி, இருவரையும் வலுக்கட்டாயமாக காரை விட்டு இறக்கிவிட்டு பறந்துவிட்டார்.
நடு ரோட்டில் வலியால் துடித்துள்ளார் நூர்ஜஹான். அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வந்திருந்த சில பெண்கள், இதை பார்த்து ஓடிவந்து நூர்ஜஹானை கோயிலுக்குள் கூட்டிச் சென்றனர். பக்கத்து வீடுகளில் இருந்து பெட்ஷீட், கம்பளி, சுடுதண்ணீர் போன்றவற்றை எடுத்து வந்து கோயிலுக்குள்ளேயே மறைவை ஏற்படுத்தி பேறுகாலம் பார்க்க தொடங்கினர்.
சில நிமிடங்களில், நூர்ஜஹானுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து நூர்ஜஹான் கூறுகையில், "கணபதி கோயிலுக்குள் என்னை அழைத்துச் சென்று பேறுகாலம் பார்த்தபோதே எனக்கு பாதி கவலை போய்விட்டது. கடவுள் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தேன். எனது பிள்ளைக்கு கணேஷ் என்று பெயர் சூட்ட உள்ளேன்" என்றார்.
மதக்கலவர பூமி போல வெளியே காட்சியளிக்கும், மும்பையில்தான் இப்படி ஒரு நல்லிணக்க சம்பவம் நடந்துள்ளது.