மண்டை ஓடு, மண்சட்டியுடன் டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்!!
மண்டை ஓடு மண்சட்டியுடன் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி: வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்கக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.அவர்கள் கைகளில் மண்டை ஓடு மற்றும் மண்சட்டியை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயில் டெல்லியில் பிரதமர் வீட்டுக்கு செல்லும் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மேல்சட்டை அணியாமல் அரைநிர்வாணத்துடன் கைகளில் மண்டை ஓடு மற்றும் மண்சட்டியை ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
விவசாயிகளுக்கு பென்ஷன் தொகையாக மாதம் தோறும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்திய அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 100 நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு தமிழக விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். தமிழக விவசாயிகள் மேல்சட்டையின்றி மண்டை ஓடு மற்றும் மண்சட்டியுடன் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.