ஜெ. அப்பீல் வழக்கில் கர்நாடக தரப்பு எழுத்துப்பூர்வ இறுதி வாதம் ஹைகோர்ட்டில் நாளை தாக்கல்!
பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில் கர்நாடகா சார்பில் நாளை எழுத்துப்பூர்வ வாதம் சமர்ப்பிக்கப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதா. இந்த வழக்கில் அரசு வக்கீலாக ஆஜரான பவானிசிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அன்பழகன் மற்றும் கர்நாடக தரப்புகள், எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து அன்பழகன் சார்பில், இன்றே 81 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதம், கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் கர்நாடக அரசு தாக்கல் செய்ய வேண்டியதுதான் பாக்கி.
இதுகுறித்து கர்நாடக வழக்கறிஞர்கள் குழு 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், "இறுதி வாதத்தை தயார் செய்து வருகிறோம். செவ்வாய்க்கிழமை, ஹைகோர்ட்டில் தாக்கல் செய்வோம். ஒருவேளை முடியாவிட்டால் கூடுதலாக ஒரு நாள் எடுத்துக்கொள்ளுவோம்" என்று கூறியது.
இந்த வாத பட்டியல் சுமார் 50 பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.