ஏவுகணை சோதனை... அமெரிக்க சுதந்திர தினத்தன்று வட கொரியாவின் சவால்!
பியாங்யங் (வடகொரியா): அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி, வடகொரியா புதிய 'கண்டம் விட்டு கண்டம் பாயும்' ஏவுகணை சோதனை நடத்தி அதில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
வட கொரியாவின் அறிக்கைப்படி இந்த ஏவுகணை 2802 கிலோமீட்டர் உயரத்திற்கு சென்றுள்ளது. இதுவரையிலும் வட கொரியா நடத்திய சோதனையில் இந்த முறையே அதிக பட்ச உயரத்தை எட்டியுள்ளது.
இந்த சோதனையின் வெற்றியும் தூரமும் உண்மையான தகவல் என்றால், வட கொரியாவால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை தாக்க முடியும்.
இன்னொன்று வடகொரியா சோதனை நடத்திய நேரம் அமெரிக்க சுதந்திர தினமாகும். கடந்த வாரம் தான் அதிபர் ட்ரம்ப் சீனாவுடனும் ஜப்பானுடனும் வடகொரியாவின் அச்சுறுத்தல் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த வாரம் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
இத்தகைய தொலைதூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையில் , சிறிய வகை அணுகுண்டுகளை பொருத்தும் டெக்னாலஜியையும் வடகொரியா கண்டுபிடித்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுவது இயற்கையே.
Recommended Video
வட கொரியாவின் நேற்றைய சோதனையைத் தொடர்ந்து தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து தங்கள் ஏவுகணை தயார் நிலை பற்றி உறுதி செய்யும் சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளார்கள். இதன் மூலம் எதற்கும் தயார் என்று தென் கொரியாவும் அமெரிக்காவும், வட கொரியாவுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள்.
அமெரிக்காவின் ஐநா தூதரக அதிகாரி நிக்கி ஹாலே, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவரும் சீனா வின் தூதரக அதிகாரியுமான லியூ ஜியேயி விடம் , அவசர கூட்டத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். புதன்கிழமை இந்த அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
அதிபர் ட்ரம்ப், ட்விட்டர் மூலம் வடகொரியாவின் ஏவுகணை சோதனையை உறுதிபடுத்தியுள்ளார். மேலும் இந்த பையனுக்கு வேறு உருப்படியான வேலை இல்லையா என்றும் கேட்டுள்ளார். தென் கொரியாவும் ஜப்பானும் இன்னும் இவரை விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. சீனா கடும் நடவடிக்கை எடுத்து இந்த நான்சென்ஸை முடிவுக்கு கொண்டு வரக்கூடும் என்றும் ட்ரம்ப் ட்விட்டியுள்ளார்.
ஐநா சபை செயலாளர் ஜெனரல் அண்டோனியோ கட்டர்ஸ், வட கொரியாவின் ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் சோதனை மூலம், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை உள்ளது என்று கூறியுள்ளார்.
அமெரிக்க சுதந்திர தினத்தன்று, வட கொரியா புதிய அச்சுறுத்தலை கொடுத்து, உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இது அடுத்த நிலைக்குச் சென்று போர் அபாயத்தை ஏற்படுத்துமா அல்லது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு கூடுதல் நிபந்தனைக்காக போடும் நாடகமா என்பது கிம் ஜாங் உன் - க்கே வெளிச்சம்.