காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 'பிளேட் ரன்னர்' ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறை!
பிரிட்டோியா, தென் ஆப்பிரிக்கா: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரரும், 'பிளேட் ரன்னர்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தின்போது நடந்த பயங்கர சம்பவத்தில் ரீவாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் பிஸ்டோரியஸ். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது.
இந்த வழக்கு பிரிட்டோரியாவில் நீதிபதி தோகோஸைல் மசிபா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது நீதிபதி மசிபா தனது தீர்ப்பை அளித்துள்ளார். அதில், குற்றத்துக்குரிய கொலை என்பதால் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக கூறியுள்ளார் நீதிபதி.
மேலும் துப்பாக்கியை பயன்படுத்தியது தொடர்பான இன்னொரு குற்றச்சாட்டில் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தத் தண்டனையை தற்போதைக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், திட்டமிட்டு இந்தக் கொலையை பிஸ்டோரியஸ் செய்யவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் பிஸ்டோரியஸின் வக்கீல்கள் நீதிபதியிடம், பிஸ்டோரியஸுக்கு சிறை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் 3 வருட சீர்திருத்த தண்டனை விதிக்கலாம் என்று வலியுறுத்தினர். அதாவது வீட்டுக் காவல் போல. இருப்பினும் நீதிபதி அதை நிராகரித்து விட்டார்.
பிஸ்டோரியஸுக்கு இரு கால்களும் கிடையாது. 'மெட்டல்' கால்களுடன் அவர் வலம் வருகிறார். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அவர் மற்ற சாதாரண வீரர்களுடன் இணைந்து போட்டியிட்டு புதிய சாதனை படைத்தவர் ஆவார்
கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தின்போது பிஸ்டோரியஸுக்கும், அவரது காதலி ரீவாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது டாய்லெட்டுக்குள் ரீவாவைத் தள்ளி துப்பாக்கியால் நான்கு முறை சுட்டார் பிஸ்டோரியஸ். இதில் ரீவா ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
தனது தண்டனையை எதிர்த்து அப்பீல்செய்ய பிஸ்டோரியஸுக்கு வாய்ப்பு இருக்கிறது.