இலங்கை சிறைகளில் இருந்து 85 தமிழக மீனவர்கள் விடுவிப்பு.. இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இலங்கை சிறைகளில் இருந்து 85 தமிழக மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 85 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
கடந்த 6ம் தேதி ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் சென்று கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் பிரிட்ஜோ என்ற 21 வயது மீனவர் குண்டுபாய்ந்து பரிதாபமாக உயிர் இழந்தார். சரோன் என்ற இன்னொரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
கொந்தளிப்பு
நடுகடலில் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் இலங்கை அரசை கண்டித்து மீனவர்களும் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.
பச்சைப் பொய்
இதனைத் தொடர்ந்து, கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இலங்கை அரசு பச்சையாக பொய் கூறியது. ஆனால், இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக இலங்கை அரசு தெரிவித்தது.
தொடர் போராட்ட எதிரொளி
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க கொழும்பு நகரில் இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பிலும் பரஸ்பரம் தங்களது சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.
விடுதலை அறிவிப்பு
அதன்படி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் இதேபோல் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கைதாகி இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்கள் 19 பேரை இந்திய அரசு விடுதலை செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.
85 மீனவர்கள் விடுதலை
இதனைத் தொடர்ந்து இன்று இலங்கை சிறையில் இருந்த 85 தமிழக மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அரசு ஒப்படைத்துள்ளது. விரைவில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.