சென்னையில் களைகட்டிய யோகா தினம்.. 1000 போலீசார் பங்கேற்ற பிரமாண்ட நிகழ்ச்சி
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று போலீசார் பங்கேற்ற பிரமாண்ட யோகா பயிற்சி நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான யோகா நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலும் யோகா தின கொண்டாட்டங்கள் களை கட்டின. கல்லூரிகள், பள்ளிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்தவகையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், போலீசார் பங்கேற்ற யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், 1000 போலீசார் கலந்துகொண்டு, பலவித ஆசனங்களை செய்தனர்.
இந்த யோகா பயிற்சிக்கு, பிரம்ம குமாரிகள் சபையினர் ஒருங்கிணைப்பு செய்தனர். சென்னை மாநகர உளவுத்துறை போலீஸ் கமிஷனர் திருநாவுக்கரசு, ரிசர்வ் போலீஸ் பிரிவு கமிஷனர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.