வருமான வரித்துறை புகாரால் 3 அமைச்சர்கள் எந்த நேரத்திலும் கைது? பரபரப்பில் தமிழக அரசியல்
ஐடி ரெய்டில் சிக்கிய ஆதாரங்கள் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த புதிய வழக்கும் அமைச்சரவையை ஆட்டம் காண வைத்துள்ளது.
சென்னை: ஐடி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக 3 அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி பணப்பட்டுவாடா தொடர்பாக ஏப்ரல் 7ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள வீடு, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அமைச்சர்கள் அத்துமீறல்
சென்னையில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, காமராஜ் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் தங்களை வீட்டிற்குள் விடும்படி, வாசலில் காவலுக்கு நின்ற மத்தியபடை காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசில் புகார்
அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டதும், வீட்டிற்குள் சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இவர்கள் அதிகாரிகளை மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு இயக்குனர் முரளிகுமார், சென்னை போலீஸ் கமிஷனர் கரண் சின்ஹாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, அமைச்சர்கள் மீது சென்னை அபிராமபுரம் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
மிரட்டல், ஆதாரங்களை அழித்தல், பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசின் டெல்லிக்கான சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும், அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் டிரைவர் உதயகுமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதா?
இந்த புகாரின் பேரில் அமைச்சர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இது அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐடி ரெய்டில் சிக்கிய ஆதாரங்கள் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த புதிய வழக்கும் அமைச்சரவையை ஆட்டம் காண வைத்துள்ளது.