காவிரி பிரச்சனையை தீர்க்காமல் அதை வைத்து அரசியல் செய்யும் திமுக, அதிமுக: அமித் ஷா 'பொளேர்'
திருச்சி: திமுகவும், அதிமுகவும் காவிரி பிரச்சனையை தீர்க்காமல் அதை வைத்து அரசியல் செய்வதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஊழல் கட்சிகள்
அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுமே ஊழல் கட்சிகள் ஆகும். அந்த கட்சிகளின் தலைவர்கள் மீது நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் ஆட்சிக்கு வரும்போது எல்லாம் ஊழல் செய்திருக்கிறார்கள். 2ஜி ஊழல் வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கு என ஊழல் வழக்குகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஊழலால் தான் தமிழகம் முன்னேறவில்லை.
ஒத்துழைப்பு
தமிழக அரசின் ஒத்துழையாமையால் தான் மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களை சென்றடையாமல் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து தமிழக அரசு இன்னும் ஒரு முடிவு எடுக்காமல் உள்ளது. அதனால் தான் மருத்துவமனை அமைப்பதில் காலதாமதம் ஆகிறது.
திட்டங்கள்
முத்ரா வங்கி கடன் திட்டம், ஏழை மக்களுக்கான காப்பீடு திட்டம், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல மத்திய அரசின் திட்டங்களால் பிற மாநிலங்கள் பயனடைந்துள்ளன. ஆனால் தமிழக அரசின் ஒத்துழையாமையால் தமிழக மக்களுக்கு இந்த திட்டங்கள் கிடைக்கவில்லை.
மீனவர்கள்
கடலுக்கு மீ்ன் பிடிக்கச் செல்லும்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை வெள்ளம்
தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண நிதியை மாநில அரசிடம் அளித்தது. தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சி அமைய பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
டாஸ்மாக்
தமிழக அரசு மது விற்பனை செய்து மக்களின் பணத்தை சுரண்டுவதில் தான் ஆர்வமாக உள்ளது. அதிமுக ஆட்சியிலும் சரி, திமுக ஆட்சியிலும் சரி மது விற்பனையால் மக்களுக்கு தீமை செய்யப்பட்டுள்ளது.
பலமான கூட்டணி
லோக்சபா தேர்தலில் மக்கள் மோடி என்ற ஒரு தனிநபருக்காக வாக்களித்தனர். ஏதோ ஒரு கட்சிக்காக அல்ல. 14 மாநிலங்களில் ஆளும் தேசிய கட்சி கூட்டணிக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி வராதது பெரிய விஷயம் இல்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணி பலமாக உள்ளது.
காவிரி பிரச்சனை
காவிரி பிரச்சனையை தீர்த்து வைக்க வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே முயற்சி செய்யப்பட்டது. தற்போது பிரதமர் மோடி அந்த பிரச்சனையை தீர்க்க முயன்று வருகிறார். அதிமுகவும், திமுகவும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தபோது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இருப்பினும் அந்த இரு கட்சிகளும் காவிரி பிரச்சனையை தீர்க்க முயலவில்லை. அவர்களுக்கு மக்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க விருப்பம் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு குழு அமைப்பது குறித்து மாநில அரசுகளுடன் பேசி விரைவில் முடிவு செய்யப்படும்.
அதிமுக
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால் அந்த கூட்டணி அமையாததில் ஏமாற்றமும் இல்லை. லோக்சபா தேர்தலில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டோம்.
மோடி
தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய மோடி வருவார். அவர் வரும் தேதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும். திமுக, அதிமுகவுக்கு முன்பு காங்கிரஸ் தான் வலுவான கட்சியாக இருந்தது. அந்த கட்சியை திமுக வீழ்த்தியது போன்று பாஜகவும் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஜல்லிக்கட்டு
திருச்சி கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு காங்கிரஸ் ஆட்சியில் தான் தடை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை மத்திய அரசு நீக்கியும் அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இது குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஜூலை மாதம் வழக்கு விசாரணைக்கு வருகையில் தடையை நீக்கக் கோரி மத்திய அரசு மனு சமர்பிக்கும். அடுத்த பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுடன் கொண்டாடலாம் என்றார்.