சசியால் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிக்க கோரி டிராபிக் ராமசாமி, பாமக பாலு வழக்கு
முதல்வராக முயற்சிக்கும் சசிகலா தரப்பினரால் பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ள 131 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக பாலு, டிராபிக் ராமசாமி ஆகியோ
சென்னை: சிறைபிடிக்கப்பட்டுள்ள 131 அதிமுக எம்எல்ஏக்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதேபோல சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் முன்பு பா.ம.க வழக்கறிஞர் பாலு முறையிட்டார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் நடத்திய 40 நிமிட தியான புரட்சி தமிழக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு என்பதுதான் இப்போதைய கேள்விக்குறி.
ஞாயிறன்று சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தால் சசிகலா இன்றைக்கு முதல்வராக பதவி பிரமாணம் எடுத்திருப்பார். திங்கட்கிழமையன்று இரவு ஓ.பன்னீர் செல்வம் உயர்த்திய போர்க்கொடி சசிகலாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டிய சசிகலா, ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்பு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதற்காக கூட்டம் முடிந்ததும் அதிமுக எம்எல்ஏக்கள் தனியார் சொகுசுப் பேருந்தில் சசிகலா குடும்பத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
எம்எல்ஏக்கள் சிறை
எம்எல்ஏக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்த சசிகலா குடும்பத்தினர், பகல் முழுவதும் அவர்களை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் சென்றனர். ஈசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சசிகலா ஆளுநரை சந்திக்கும்போது அவர்களை அனைவரும் சென்னை அழைத்துவரப்படுவார்கள் என தெரிகிறது. ஒவ்வொரு எம்எல்ஏவையும் கண்காணிக்க 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டுள்ளனர் எம்எல்ஏக்கள்.
ஹைகோர்ட்டில் முறையீடு
இதனிடையே சிறைபிடிக்கப்பட்டுள்ள 130 அதிமுக எம்எல்ஏக்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் முன்பு பாமக வழக்கறிஞர் பாலு முறையீடு செய்துள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மனுதாக்கல் செய்ய டிராபிக் ராமசாமிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திரமாக உள்ளனர்
அதிமுக எம்எல்ஏக்களை விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையின்போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அரசு விடுதியில் சுதந்திரமாக உள்ளனர் என்று அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மனுதாக்கல் செய்ய உத்தரவு
இதனையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய வழக்கறிஞர் பாலுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாலு தாக்கல் செய்யும் மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சிறையில் எம்எல்ஏக்கள்
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ரிசார்ட்ஸ்சில் பிணைக்கைதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏக்கள் விடுதியில் சுதந்திரமாக உள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.