சொத்துக் குவிப்பு தீர்ப்பு வரும் வரை சசிகலாவை கூப்பிட மாட்டார் ஆளுநர்
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை அவரை தமிழக பொறுப்பு ஆளுநர் சந்திக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்று தமிழக பொறுப்பு ஆளுநர் உறுதியுடன் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. சசிகலா என்னதான் மிரட்டினாலும் அதற்கு ஆளுநர் மாளிகை அடி பணியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதாகவும், அதற்கு சொத்துக் குவிப்பு தீர்ப்பு வழக்கின் தீர்ப்பு வரும் காத்திருப்பது அவசியம் என்று அவர் கருதுவதாகவும், இதனால்தான் தனது முடிவை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தீர்ப்பு வந்த அடுத்த நிமிடமே ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை ஆளுநர் பெற்று விட்டதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பு தகவல்கள் தெரிவிகக்கின்றன.
மற்றபடி சசிகலா சொல்வது போல அதிமுகவை உடைக்க ஆளுநர் முயற்சிக்கவில்லை. ஆளுநரின் தாமதத்திற்கு இதுதான் காரணம். வேறு எதுவும் இல்லை. தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டுமே ஆளுநரின் கருத்தாகும்.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு முக்கியமானது. அதில் சசிகலா விடுதலையாகி விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தண்டிக்கப்பட்டு விட்டால் அவர் பதவியிழக்க நேரிடும். எனவே அடுத்தடுத்து பதவிப்பிரமாண நிகழ்ச்சிகளை நடத்த ஆளுநர் விரும்பவில்லை. இது தமிழகத்தில் தேவையில்லாத குழப்பங்களையும் ஏற்படுத்தும் என்பதால்தான் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இப்போதைக்கு சசிகலாவுக்கு நேரம் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.