அவசர சட்டம் பற்றி அச்சம் வேண்டாம்.. சட்டசபையில் நிறைவேற்றினால் நிரந்தரமாகிவிடும்: ஓ.பி.எஸ் பேட்டி
வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் நாளை துள்ளிக்குதிக்கும் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்றும், நாளை வாடிவாசல் திறக்கப்பட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர சட்டம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நிரந்தர தீர்வு காணும் வரையில் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. அவசர கதியில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பவில்லை எனக் கூறி அலங்காநல்லூரிலும் வாடிவாசல் முன்பு பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது, ஜல்லிக்கட்டை பொறுத்த வரையில் தற்காலிகம் என்ற கேள்விக்கே இடம் இல்லை. அவசரச் சட்டம் பற்றி அச்சப்படத் தேவையில்லை. நிரந்தர சட்டம் என்பதை போராட்டக்காரர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தருவார்கள் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டம் அடுத்த வாரமே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் நாளை வாடிவாசல் திறக்கும் காளைகள் துள்ளிக்குதிக்கும் எனவும் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.