தினகரனுக்கு அறிக்கை விட்டதை கேட்ட போலீஸ்... கடுப்பாகி போயஸ் தோட்டத்துக்கு போன தீபா!
டிடிவி.தினகரனுக்கு திராக அறிக்கை விட்டது குறித்து போலீசார் தீபாவை தொடர்பு கொண்டு கேட்டதால் கடுப்பாகி இன்று போயஸ் கார்டனுக்கு அதிரடியாக சென்றார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை எதிர்த்து ஜெ.தீபா அறிக்கை விட்டது குறித்து போலீசார் கேட்டதால் கடுப்பான தீபா இன்று போயஸ் கார்டனில் அதிரடியாக நுழைந்தார்.
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக ஜெயலலிதா அம்மா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தீபா அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஏன் அறிக்கை விடப்பட்டது என்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த போலீஸ்காரரை தொடர்பு கொண்டு பேசிய தீபா தினகரன் என்ன அரசு அதிகாரியா, அவரை எதிர்த்து அறிக்கை வெளியிடக் கூடாதா, இதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள் என்று சரமாரியாக போட்டுத் தாக்கியுள்ளார். இதனால் செய்வதறியாது முழித்த அந்த போலீஸ்காரர் சாரிமா தெரியாம கேட்டுட்டேன் என்று சொல்லி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
இந்நிலையில் ஜெ.தீபா தன்னுடைய அதிகாரத்தையும், உரிமையையும் எடுத்து சொல்லும் விதமாக இன்று காலை அதிரடிவயாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு அதிரடியாக நுழைய முயன்றார். ஆனால் அவர் போயஸ்கார்டன் இல்லத்திற்குள் நுழைய சசிகலா தரப்பு அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் தீபா வீட்டு வாசலிலேயே நின்று பாதுகாவலர்கள் உள்ளிட்டோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தீபாவைத் தொடர்ந்து தீபக், தீபாவின் கணவர் மாதவன், உள்ளிட்டோரும் போயஸ் கார்டன் வந்துள்ளனர். அவர்களுக்கும் அனுமதி மறுத்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.