ஜெயலலிதா மரணம்... கொடநாடு கொலை... விபத்து... தற்கொலை - நீடிக்கும் மர்மம்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பிறகு கொடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை, விபத்து, தொடர் தற்கொலை என மர்மம் நீடிக்கிறது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடப்பவை எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. கொடநாடு பங்களா காவலாளி கொலை தொடங்கி, டிரைவர் கனகராஜ் மரணம், தினேஷ் தற்கொலை, அப்பல்லோ நர்ஸ் தற்கொலை முயற்சி என மர்மம் நீடித்து வருகிறது.
அரசு பணிகளில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா திடீரென உடல் நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நன்றாக உடல்நிலை தேறி வந்ததாக கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.
காவலாளி கொலை
போயஸ் தோட்ட பங்களாவில் அமானுஷ்ய சத்தம் கேட்பதாக பீதி பரவியது. ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களா காவலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
டிரைவர் மரணம்
கொலை வழக்கில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட்ட டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி மர்மமான முறையில் மரணமடைந்தார். இது விபத்தா, கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விபத்து, தற்கொலை
கனகராஜின் நண்பர் சயன் அதே நாளில் விபத்தில் சிக்கினார். அவரது மனைவி, மகள் விபத்தில் பலியாகினர். சில வாரங்களுக்கு முன்பு கொடநாடு பங்களாவில் வேலை பார்த்த இளைஞர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.
நர்ஸ் தற்கொலை முயற்சி
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டு பீதியை கிளப்பியது. இந்த நிலையில் அப்பல்லோ நர்ஸ் குளோரியா தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோரியாவின் கணவர் கடந்த மாதம் தற்கொலை செய்த நிலையில் குளோரியாவும் இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.