'பச்சைத் தமிழன்' ரஜினியின் 'மராத்தி' உணர்வு... உண்மையை போட்டுடைத்த நிதின் கட்காரி
பச்சைத் தமிழனாக தம்மை காட்டிக் கொள்ளும் ரஜினிகாந்தின் மராத்தி உணர்வை டிவி பேட்டியில் போட்டுடைத்துவிட்டார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.
சென்னை: தம்மை பச்சைத் தமிழனாக பிரகடனப்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த் உண்மையில் மராத்தியர் என்ற உணர்வுடன் இருப்பதாகவே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உண்மையை போட்டுடைத்திருக்கிறார்.
கால்நூற்றாண்டு காலமாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என கூறிவந்தார் நடிகர் ரஜினிகாந்த். தற்போது தமது ரசிகர்களுடனான சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருக்கிறார்.
கன்னட ரஜினிகாந்த்
இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அதேநேரத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ரஜினிகாந்த், தமிழக அரசியலில் ஈடுபடக் கூடாது என்கிற பிரசாரமும் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
பச்சைத் தமிழன்
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், கடந்த 43 ஆண்டுகாலமாக தமிழகத்தில்தான் வசிக்கிறேன்; என்னை பச்சைத் தமிழனாக்கியது இந்த தமிழ் மக்கள்தான் என அதிரடியாக பேசினார். ஆனாலும் ரஜினிகாந்த் பச்சைத் தமிழனா? என்பதை முன்வைத்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
நிதின் கட்காரி அழைப்பு
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நியூஸ் 18 டிவி சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்; பாஜகதான் அவருக்கு சரியான இடம் என கூறியிருக்கிறார்.
மராத்தி ரஜினி
அத்துடன் ரஜினிகாந்த் ஒரு மராத்தியர்... அவர் மராத்தியர் என்பதாலேயே வீட்டில் பெரிய வீரசிவாஜி படம் வைத்திருக்கிறார் என நிலைமை தெரியாமல் கருத்து கூறியிருக்கிறார். இதுவும் இப்போது சர்ச்சையாகிவிட்டது.
உணர்வால் மராத்தியர்
அதாவது தம்மை பச்சைத் தமிழனாக காட்டிக் கொள்ளும் ரஜினிகாந்த், உண்மையில் உணர்வால் மராத்தியராகவே இருக்கிறார். அதைத்தான் நிதின் கட்காரி போட்டுடைத்துவிட்டார் என்கிற விமர்சனம் இப்போது சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.
போர் வருவதற்குள் 'அக்கப்போர்'!