அதிமுக நடத்தும் இப்தார் விருந்து.. எடப்பாடி தலைமையில்.. து.பொ.செ.வுக்கு நோ அழைப்பு..!
அதிமுகவின் இப்தார் நோன்புக்கு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதால் முதல்வர் எடப்பாடி அணி மீது கடும் கடுப்பில் உள்ளனராம்.
சென்னை: அதிமுக சார்பில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் நடக்கும் என்று அதிமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிளவுப்பட்டது. இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவும், அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இரு அணிகளும் இணைய திட்டமிட்டன. அதன்படி பரஸ்பரம் பச்சைக் கொடி காட்டப்பட்டது.
தினகரனை ஒதுக்கி வைத்து...
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்றால் தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்தது. இதைத் தொடர்ந்து அவ்வாறு செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூட்டாக அறிவித்தனர்.
ஜாமீனில் வெளியே வந்து...
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தார் தினகரன். அப்போது விமான நிலையத்தில் பேட்டி அளித்தபோது, கட்சி பணிகளில் தான் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தன்னை நீக்க
பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஆலோசனை
அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி தினகரனை விலக்கி வைத்ததாக கூறிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றனர். இதனால் தினகரன் கோபம் அடைந்தார். பின்னர் தினகரனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி தற்போது 34 எம்எல்ஏ-க்கள் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை பலத்தை எந்த நேரத்திலும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வருடன் ஆதரவாளர்கள் சந்திப்பு
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கட்சியை தினகரன் பார்த்துக் கொள்வார் என்று தெரிவித்தனர். மேலும் 21-ஆம் தேதி கட்சி சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு தினகரனை தலைமை தாங்க அழைக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அழைப்பு இல்லை
அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அன்வர்ராஜா எம்.பி. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், முதல்வர் தலைமையில் இப்தார் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனால் தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
சந்திப்பு ரத்து
ஒவ்வொரு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த தினகரன் முடிவு செய்தார். இன்று வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்க முடிவு செய்திருந்தார். இதுபற்றி கட்சி நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று இன்று நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியை தினகரன் ரத்து செய்து விட்டார்.