மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை முறிந்தது.. போலீஸ் தடியடி
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த 6 நாட்களாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றினாலும் நிரந்தர சட்டம் தேவை என்று கோரி போராட்டத்தை கைவிடாமல் இரவும் பகலுமாக மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று சட்டபேரவைக் கூட்டம் கூட உள்ளதால், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியை போலீசார் செய்து வருகின்றனர்.
#Jallikattu supporters being forcefully evicted by police from the protesting site in Madurai's Tamukkam #TamilNadu pic.twitter.com/1n1mEqo0TH
— ANI (@ANI_news) January 23, 2017
சென்னை போராட்டக்காரர்களைப் போன்றே உறுதியுடன் போராடி வரும் மதுரை மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர். அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என்று போலீஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, போலீசார் போராட்டக்காரர்களுடன் தமுக்கம் மைதானத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. இதனையடுத் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல 5 நிமிடங்கள் போலீசாரால் கொடுக்கப்பட்டது. மக்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.