அடுத்ததாக கல்வி கட்டண கொள்ளைக்கு எதிராக போராட்டம்.. இளைஞர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி அழைப்பு
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு இளைஞர்கள் கலைந்து போகக்கூடாது. நமது அடுத்த போராட்டம், பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளைக்கு எதிரானதாக இருக்க வேண்டும் என்று, ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கைவிடுத்துள்ளார்.
மெரினா போராட்டக்காரர்கள் நடுவே நேற்றிரவு ஆர்.ஜே.பாலாஜி உணர்ச்சி பொங்க பேசினார். அவர் கூறுகையில், மெரினாவில் நடைபெறும் இந்த போராட்டம் அமெரிக்க பத்திரிகை முதல் பக்க செய்தியாக வருகிறது. இத்தனை வருடமாக, யாராவது லீடர் வருவார்களா என எதிர்பார்த்தோம். எவனுமே வரவில்லை. ஓட்டு எண்ணிக்கை குறைந்தது அதனால்தான். இங்கே இருப்பவர்கள்தான் இனி லீடர்.
ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நமது 39 எம்.பிக்கள் கொண்டுவரவில்லை. கொண்டு வந்தது நீங்க. இவ்வளவுநாள் முடியாது என்று சொன்ன அரசாங்கங்கள் இப்போது சட்டத்தை நிறைவேற்றியது எப்படி? இந்த போராட்டம் இத்தோடு முடிவடையாது.
ஏப்ரல் ஸ்கூல்ல அவ்வளோ டொனேஷன் வாங்குவாங்க, அரசு சொன்னா கேட்கமாட்டாங்க. அதை எதிர்த்து போராடுவோம். ஏன் ஜென்டில்மேன், ரமணா படத்தில்தான் நடக்குமா. நிஜத்தில் நடக்கும். படிப்பதற்கு காசு கேட்டா ஏப்ரல் மாசம் ரோட்டுக்கு வருவோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் ரோட்டுக்கு வரனும். நம்ம மேல பயம் இருக்கனும்.
சின்ன குழந்தை முதல் வயதான ஆயா வரை இப்போது ரோட்டுக்கு வந்து கேள்வி கேட்கிறார்கள். இனியும் வரலாம். இவ்வாறு சுமார் 10 நிமிடம் பாலாஜி பேசும் பேச்சு உணர்ச்சிகரமாக உள்ளது. நீங்களும் பாருங்கள்.