சென்னையில் புனித ரமலான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்
புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
சென்னை: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை தமிழகம் முழுவதுமாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
முதல் பிறை தென்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டபின்னர், இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்கள் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
சென்னை பிராட்வேயில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பாக ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தத் தொழுகையில் பங்கேற்று பிரார்த்தனை நடத்தினர்.
திருவல்லிக்கேணியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆற்காடு நவாப் பங்கேற்றார். நாட்டு மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடனும், சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் வாழ்த்து கூறினார்.